அலங்காரம்-03/04: கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!
"சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்? அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!
"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! - எது உண்மை?
பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்! சந்தேகம் இல்லை!
ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!
ஆனா "நாராயணா"-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,
"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே! உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"
முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"! ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!
ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே! அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?
அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்! பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!
இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)
(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை, அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?
பாசங்களை அறுத்து, மீண்டும் பிறக்க ஒட்டாதவன் அயில் வேலவன்!
அவன் கவிதையை, (தலை) எழுத்துப் பிழைகள் அறுமாறு, கற்க மாட்டீங்களோ?
தீப்பொறி பறக்க, புகை எழ, சினத்துடன் வரும் யமன், கயிறு வீசப் போகிறான்!
அப்படிச் சுருக்கு மாட்டும் போதா, சுப்ரமண்யா என்று ஓதத் தொடங்கப் போகிறீர்கள்? ஹா ஹா ஹா!
கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?
அதுக்கு முன்னாடி நண்பர் குமரனின் இந்த இடுகையையும் ஒரு வாசிப்பு வாசித்து விடுங்கள்! பஜ கோவிந்தம் பாடலின் ஆரம்ப வரிகளில், இதே கருத்தை மிளிர்விக்கிறார் ஆதிசங்கரர்!
***அயில் வேல்-னு கந்த சஷ்டிக் கவசத்தில் எங்கு வரும்? அதையும் சொல்லுங்க பார்ப்போம்!
அழித்துப் பிறக்க ஒட்டா = பாசங்களை அழித்துப் பிறவிச் சுழலை முடித்து வைப்பவன் முருகப் பெருமான்!
பசு-பாசம்-பதி! மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!
பசுக்களுக்கும் பதிக்கும் தடையாக நிற்பது பாசம்! அந்தப் பாசத்தை அழித்து, பதியிடம் சேர்ப்பவன் முருகன்! அவன் கையில் அயில் வேல்! அயில்=கூர்மை/உறுதி!
எதற்கு அயில்வேல்? பாசக் கயிறு வீசப் போறாங்க! அதுக்கு எதிரான ஆயுதம் தான் அயில் வேல்!
அன்பால், எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! = பிரம்மா என் தலை எழுத்தை எழுதும் போது மட்டும் தூங்கிட்டான் போல-ன்னு சில சமயம் நகைச்சு வைப்போம் அல்லவா? - அந்த எழுத்துப் பிழை எப்படி அறும்? அன்பால் மட்டுமே அறும்! அன்பைப் பிழையின்றிக் கற்றால், பிழை போகும்!
அட, அன்பை எப்படிங்க கற்க முடியும்? அது தானா வரணும்! இது கூடவாத் தெரியாது அருணகிருக்கு? கற்கின்றிலீர்-ன்னு சொல்றாரே?
உம்...நல்ல கேள்வி தான்! அருணகிரி சும்மா இலக்கணமா, எகனை மொகனையாச் சொல்லிட்டாரு போல! :)
கல்வி எப்படி வரும்? கல்வியே, வா-ன்னா வந்துருமா? மெனக்கெடணும்! நாம விரும்பிக் கற்றால் தான், கல்வி வரும் இல்லையா? கல்வி நல்ல விஷயம் தானே? அது தானே வராதா-ன்னா, வராது! நாம தான் அதைக் கற்கணும்!
அதே போல அன்பும் நாம கொடுத்தாத் தான் வரும்! தானா வராது! அன்பைக் கொடுக்கக் "கற்றுக்" கொள்ளணும்! அதான் அன்பைக் கற்கின்றிலீர்-னு சொல்றாரு அருணகிரி! இப்ப ஓக்கேவா? :)
இப்படி, அயில் வேலவன் மேல் வைக்கும் அன்பால், தலை எழுத்துப் பிழைகள் அறும்! கால்பட்டு அழிந்தது, இங்கென் தலைமேல், அயன் கையெழுத்தே, என்று இன்னொரு பாட்டிலும் சொல்லுவாரு அருணகிரி! அந்தக் கந்தர் அலங்காரம் பின்னால் வரும்! ***இப்போதைக்கு அந்தப் பாட்டை மட்டும் பின்னூட்டதில் யாராச்சும் சொல்லுங்க!
எரி மூண்டது என்ன, விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றால் =
வராரு மகராசன்! கூற்றுவன்! கயிறு வீசப் போறாரு! சரி, கூற்றுவன்-னு ஏன் பேரு? கூற்று=உறுதியாகக் கூறுதல்! கிட்டத்தட்ட கல் மேல் எழுத்து போல், உறுதியாகக் கூறுதல்! பாவ, புண்ணிய பட்டியல்களை எல்லாம் சாசனம் போல் உறுதிபட தீர்ப்பு கூறுவதால் கூற்றுவன்!
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே? = அவன் கழுத்தில் சுருக்கிடும் போது, "மிஸ்டர் எமதர்மன், ஒக்க நிமிட் வெயிட் மாடி! நான் எழுத்துப் பிழையை மாத்தப் போறேன்! நான் அயில்வேல் மேல் அன்பு செலுத்தப் போறேன்!"-ன்னு சொல்லத் தான் உங்களால் முடியுமா? அப்போது வாய் வருமா?
ஹா ஹா ஹா! எல்லாம் அப்புறம் கடைசியில் ரிட்டையர் ஆன பின்னால பார்த்துக்கிடலாம்; இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!
அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி! அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...
அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்!
அவன் திருப்புகழை இப்போதே ஓதி வையுங்கள்!
அலங்காரம்-04!
தேரணி இட்டுப் புரம் எரித்தான், மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! - சூர்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!
தேரணி இட்டுப் புரம் எரித்தான் = எல்லாத் தேவர்களையும் ஒரே தேரில் பல பாகங்களாக நிறுத்தி முப்புரம் எரித்தான் ஈசன்!
மகன் செங் கையில் வேல் கூரணி இட்டு = அவன் மகன் குமரவேள் கையிலே வேல்! அது கூர்+அணியாக இருக்கு! எதற்கு கூராக இருக்கு?
அணுவாகி = அணுவைப் பிளப்பது போல்; கிரௌஞ்சம் குலைந்து = கிரௌஞ்ச மலையைக் குலைத்தது! அது தாராகாசுரன் என்னும் மாய மலை!
அரக்கர் நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது = அரக்கர்களின் நேராக அமைக்கப்பட்ட படை(கடகம்) வளைந்து போனது! மலை குலைந்தது! அதனால் நிலை குலைந்தது!
சூர் பேரணி கெட்டது = சூரனின் பேரணி கெட்டது! தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே = இந்திர லோகம் பிழைத்ததுவே!
சூரனின் தம்பி தாராகாசுரன் மாயையில் வல்லவன்! யானை முகத்தவன்! அவன் கிரெளஞ்ச மலையாகி நின்று அனைவரையும் மலைக்குள் விழுங்கி விட, கூரணி வேல் அவனைத் துளைத்தது! போரில் அவன் தான் முதல் பலி! அவன் ஆட்டம் கண்ட பின், அனைத்துமே ஆட்டம் கண்டு, சூரன் ஆணவத்தால் அழிந்தான்! தேவேந்திரன் பணிவினால் வாழ்வு பெற்றான்!
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பார்கள் ஆழ்வார்கள்! அப்படிச் சொல்லி வைத்தால், இயல்பாகவே இறைவனின் நாமம், நாவில் ஒட்டிக் கொள்ளும்! செயற்கையாக வலிந்து வரவழைத்துக் கொள்ளத் தேவை இருக்காது!
அதனால் தான் அருணகிரியார், கடைசிக் காலத்திலா இதையெல்லாம் கற்கப் போகிறீர்கள்-ன்னு கேக்குறாரு! எல்லாம் சரி தான்!
ஆனால் உயிர் பிரியும் வேளையில் இறைவன் நினைப்பு வரவேண்டுமா என்ன? அந்திம காலத்தில் பகவத் நாம ஸ்மரணம் கூடத் தேவையில்லை என்பது ஒரு சித்தாந்தம்! அதை இன்னொரு நாள் மாதவிப் பந்தலில் பார்ப்போம்! அலங்காரம் அடுத்து செவ்வாய் தொடரும்!