Wednesday, September 17, 2008

அலங்காரம்-07/08: முருகன், வள்ளி, தினை மாவு - எதில் சுவை அதிகம்?

பழனி பஞ்சாமிர்தம் அப்படியே நாக்குல கரையும்! ஆனா பழனி முருகன்? அவன் தான் கோபம் கொண்ட பாலகனாச்சே! அவன் கை விரலை உண்டால் காரமாக இருக்குமோ என்னவோ? என்ன சொல்றாரு அருணகிரி? பார்க்கலாம் வாங்க!

பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)


மேலோட்டமான பொருள்:
பசுமையான தினைப் புனம். அதில் தினைக் கதிரைக் காவல் காக்கிறாள் வள்ளி! அவள் திருமார்பினை விரும்புகிறான் குமரன்!
மெய்யன்பு ஒன்றினால் மட்டும் அவனிடம் ஒன்றினால்...ஆனந்தம் அரும்பும்!

அந்த ஆனந்தத்தை ஒரு முறை ருசித்து விட்டால், கரும்பு துவர்க்கும், தேன் புளிக்கும்! இவையெல்லாம் கசந்து போய்,
கந்தன் களிப்பிலே, முருகன் முனைப்பிலே-ன்னு அந்த எண்ணம் ஒன்றே போதும்! அதுவே தித்திக்கும்! என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

இப்போ பிரிச்சி மேயலாமா?
ஹிஹி! மொத கேள்வி! சில பேர் வெளிப்படையாக் கேட்டுருவீங்க! சிலர் மனசுக்குள்ளாற மட்டும் யோசிச்சிப்பீங்க!
சிலர் சாமிப் பாட்டாச்சே-ன்னு கண்டும் காணாமப் போயிடுவீங்க! :)
அது ஏன் முருகன் வள்ளி கொங்கையை (திருமார்பை) விரும்பனும்? ஏன் அருணகிரி இப்படி எல்லாம் பாடுறாரு?

இது முருகன் நிஜமாலுமே விரும்புவதா?
இல்லை யாரையோ மனசுல வச்சிக்கிட்டு, நைசா தன் சொந்தக் கருத்தை அருணகிரி எழுதிட்டாரா? (அடியேன் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு நம் அன்பர்களால் சொல்லப்படுவது உண்டு! :))

இல்லை, அருணகிரி ஆண் என்பதால், இப்படி ஆணாதிக்கமா எழுதிட்டாரா? இல்லை, இது அக்கால புலவர்கள் வழக்கமா? இதையே ஒரு பெண் கவிஞர் எழுத முடியுமா?
இது கம்ப ரசமா? கந்த ரசமா? காதல் ரசமா? இல்லை வி-ரசமா? :)
சொல்லுங்க பார்ப்போம்!

கொங்கை என்ற சொல் கம்பராமாயணத்தில் எங்கெல்லாம் வருதுன்னு CTRL+F செஞ்சி, பேரறிஞர் அண்ணா அவர்கள், கம்ப ரசம்-னு ஒரு தொடர் கட்டுரை எழுதினாரு! "கம்பனின் ஆபாச இலக்கியம்! கம்ப ரசம் டோஸ் நம்பர்-1, டோஸ் நம்பர்-10" ன்னு அவர் கொளுத்திப் போட்டதுல, அப்பவே சும்மாப் பிச்சிக்கிட்டுப் போச்சி! :)

மென்மையே உருவான தமிழ்த் தென்றல் திரு.வி.க,  மற்றும் டாக்டர் மு.வ,  டி.கே.சி போன்ற தமிழறிஞர்களும்,  இதர சமய அறிஞர்களும், அதற்கான உண்மையான விளக்கம் எல்லாம் தந்தாங்க!
ஆனா அவங்க சொன்னதெல்லாம் அப்போது எடுபட்டு இருக்குமா-ன்னு உங்களுக்கே தெரியும்! :)  கொளூத்திப் போட்டது போட்டது தான்!  இந்த நிகழ்வை, இப்போ நம்ம பதிவுலகப் பார்வையில் இருந்தும் ஒப்பிட்டுப் பார்த்து கொள்கிறேன்! :)


பெரும் பைம் புனத்தினுள் = பெரிய பசுமையான தினைப் புனத்தில்
சிற்றேனல் = சிறு + ஏனல்; ஏனல்-னா தினைக் கதிர்!
தினைக் கதிர் யாராச்சும் பார்த்து இருக்கீயளா? தினை மாவு யாராச்சும் சாப்பிட்டு இருக்கீயளா? இல்லீன்னா அதெல்லாம் கிராமத்து சமாச்சாரம்-ன்னு சாய்ஸ்-ல விட்டாச்சா?

தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை!
குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்! இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாய்ங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது! :)

பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு.  மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல!
தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி! 
மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன்.
இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது!

தினை மாவுருண்டை செய்வது எப்படி?
தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்!
கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும்.
ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்!
அப்படியே மாவு போல உருட்டி, மாவிளக்காய் முருகனுக்குப் போட்டு, பின்னால சாப்புடலாம்! அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து!


காக்கின்ற பேதை = தினைப் புனத்தை காவல் காக்கும் வள்ளி.
கொங்கை விரும்பும் குமரனை = அவள் கொங்கையாகிய திருமார்பை விரும்பும் குமரக் கடவுள்.
மெய் அன்பினால் = உண்மையான (மெய்யான)  அன்பினால்
மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்லச் சிந்தனை செய்ய

அரும்பும் தனி பரமானந்தம் = மனசுக்குள் ஒரு கந்தக் களிப்பு,  பூ மொட்டு விரிவது போல அரும்பும்!  அரும்பு எப்போ மூடி இருந்திச்சின்னும் தெரியாது, எப்போ படீர்-ன்னு விரிஞ்சதுன்னும் தெரியாது!  அது போல இந்தக் கந்தக் களிப்பூ!

தித்தித்தது அறிந்தவன்றோ = அந்தக் கந்த ருசியின் இனிமையை அறியும் போது...
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்று புனித விவிலியம் (பைபிள்) கூறும் அல்லவா! அதே தான் இங்கும்! கந்தன் இனிமையானவன் என்பதை ருசித்துப் பாருங்கள்! அப்போது...

கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து = கரும்பும் துவர்க்கும், தேனும் புளிக்கும்!
அற கைத்ததுவே = இவையெல்லாம் கசந்து போனதுவே! உன் எண்ணம் ஒன்றே தித்திப்பதுவே! உலகச் சுவை எல்லாம் அற, எனை இழந்த நலம், சொல்லாய் முருகா, சுர பூபதியே!
திருவரங்கத்து அமுதனார் நூற்றந்தாதியில் சொல்வது போலவே இதைத் தித்தித்து உண்ண வேண்டும்! - என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

தினை மாவு தித்தித்ததுவே!
வள்ளியின் வடிவு தித்தித்ததுவே!
முருகனின் முருகு தித்தித்ததுவே!
அடியேற்கு இன்று தித்தித்ததுவே!


அடுத்த பாட்டு சிறப்பான தமிழோசைப் பாட்டு! அருணகிரி, அப்படியே அள்ளித் தெளிக்கிறார் சந்தத் தமிழை!

சளத்தில் பிணி பட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிர
குளத்தில் குதித்தும் குளித்தும் களித்தும் குடித்தும் வெற்றிக்
களத்தில் செருக்கி கழுது ஆட வேல்தொட்ட காவலனே.

சளத்தில் = கள்ளத்தனமான ஆசையில்
பிணிபட்டு = கட்டுண்டு (பிணிக்கப்பட்டு)
அசட்டுக் க்ரியைக்குள் = மூடத்தனமான செய்கைகள் செய்கிறேன்
தவிக்கும் என்றன் உளத்தில் = தவிக்கின்ற அடியேன் மனதில்
ப்ரமத்தைத் தவிர்ப்பாய் = மயக்கத்தை ஒழிப்பாயாக!

கள்ளத்தனமான ஆசைகள் உள்ளதில் வளர்த்துக் கொள்வதால், தவிப்பு தான் ஏற்படுகிறது! அந்தத் தவிப்பைத் தவிர்க்க பரிகாரம், அது இது-ன்னு அசட்டுத்தனமான செய்கைகளைத் தான் இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன்!
என் பிரமத்தையும் மயக்கத்தையும் போக்குவாயாக! பிமரங் கெட மெய்ப் பொருள் பேசியவா-ன்னு கந்தர் அனுபூதியும் சொல்லும்!

அவுணர் உரத்து - அசுரர்களுடைய மார்பில
உதிரக் குளத்தில் = இரத்தக் களரியில்
குதித்துக் குளித்து = குதித்தும் குளித்தும்
களித்து குடித்து = மகிழ்ந்தும் குடித்தும்

வெற்றிக் களத்தில், செருக்கில் = போரில் வெற்றி பெற்று
கழுது ஆட = பேய்கள் எல்லாம் கூத்தாட
வேல் தொட்ட காவலனே = வேலைத் தொட்ட காவலா...

முருகன் வேலை விடக் கூட இல்லை! சும்மா தொட்டான்!  அவன் தொட்டதற்கே தொட்டனைத்தூறும் என் மனற் கேணி!
திருக்கையால் வேல் தொட்ட காவலா,
திருக்கையால் என்னையும் தொட்டுக் கொள்!
தினமும் என் சிந்தையில் உன்னை இட்டுக் கொள்!

அடுத்து செவ்வாய் சந்திப்போம்!  இப்போது செங்கோடனை வந்திப்போம்!

15 comments:

Raghav said...

”சளத்தில் பிணி பட்டு அசட்டு கிரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய் முருகா” என்று உளமுருக வேண்டிக்கொள்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

தினை மாவு சாப்பிட்டிருக்கேன், ஆனா தேன் சேர்த்து அல்ல, வெல்லம் சேர்த்து... :-)

முருகனுக்கு அரோகரா!!!

Kavinaya said...

மாயம் அறுத்துக் காப்பாயே
மாயோன் மருகோனே!

பாடல்களும் விளக்கங்களும் சமையல் குறிப்பும் அருமை :) நன்றி கண்ணா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
”சளத்தில் பிணி பட்டு அசட்டு கிரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய் முருகா” என்று உளமுருக வேண்டிக்கொள்கிறேன்//

அடியேனுக்கும் அவ்வண்ணமே வேண்டிக் கொள்ளுங்கள் ராகவ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
தினை மாவு சாப்பிட்டிருக்கேன், ஆனா தேன் சேர்த்து அல்ல, வெல்லம் சேர்த்து... :-)//

சூப்பர்!
தேனும் தினைமாவும்-ன்னு சொல்லுவாய்ங்க!
அடுத்த முறை வாழைப்பந்தலுக்கு உங்களை அழைத்துச் செல்லும் போது தேன் கலந்த தினை மாவைச் செய்யச் சொல்கிறேன்! :)

//முருகனுக்கு அரோகரா!!!//
அரகரோகரா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
மாயம் அறுத்துக் காப்பாயே
மாயோன் மருகோனே!//

மாயோனுக்கும் சேயோனுக்கும் அப்படி ஒரு சம்ப்ந்தமா கவிக்கா!

//சமையல் குறிப்பும் அருமை :) நன்றி கண்ணா//

சமையல் குறிப்பை நீங்க குறிப்பால் உணர வேண்டும்! :)

குமரன் (Kumaran) said...

கேழ்வரகுக் களி, கம்பங்களி எல்லாம் தின்னிருக்கேன். அதெல்லாம் கணக்குல எடுத்துக்கலாமா? :-)

குறிஞ்சி, முல்லையிலும் அரிசி உண்டு. மூங்கில் அரிசி என்பார்கள். அதனைப் பற்றிய குறிஞ்சித் திணைப் பாட்டுகள் இருக்கின்றன.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
கேழ்வரகுக் களி, கம்பங்களி எல்லாம் தின்னிருக்கேன். அதெல்லாம் கணக்குல எடுத்துக்கலாமா? :-)//

தேனும் தினை மாவும் தான் இந்த குகனுக்கும் அந்த குகனுக்கும்!
குமரனுக்கு மட்டும் வேறயா?

சரி, பொழைச்சிப் போங்க! ராகவனுக்கு ஓக்கேன்னா ஓக்கே! :)

//குறிஞ்சி, முல்லையிலும் அரிசி உண்டு. மூங்கில் அரிசி என்பார்கள். அதனைப் பற்றிய குறிஞ்சித் திணைப் பாட்டுகள் இருக்கின்றன//

உங்க சங்கப் பாடல் பதிவிலும், சங்க கால மக்கள் வாழ்வியல் பதிவிலும் படித்துள்ளேன் குமரன்.
ஆனா வரகரிசி, மூங்கில் அரிசி எல்லாம் தினப்படி உணவா?
தினை தினப்படி உணவு போல!

சீனா, ஜப்பான், ஐரோப்பா-வில் எல்லாம் கூடத் தினை இருக்காம்!
உலகின் ஆதி உணவு - Alternative food crop-ன்னும் சொல்றாங்க!

jeevagv said...

இன்றைக்கு ஜோவர் மாவு உருண்டை செய்து சாப்பிடக் கொடுத்தார்கள். இப்போதான் தெரியுது, அது தான் தினை என்று!. சாப்பிட்டுவிட்டு இங்கே வந்தா, அதைப்பற்றிப் பதிவு!.
இப்போ, இங்கே அரிசி விக்கற விலையிலே, மாற வேண்டியது தான் போல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
இன்றைக்கு ஜோவர் மாவு உருண்டை செய்து சாப்பிடக் கொடுத்தார்கள்//

சூப்பர்! அதெல்லாம் பின்னூட்டத்தில் இட முடியாதா ஜீவா? :)

//சாப்பிட்டுவிட்டு இங்கே வந்தா, அதைப்பற்றிப் பதிவு//

முருகனின் பிரசாதம் அல்லவா!

//இப்போ, இங்கே அரிசி விக்கற விலையிலே, மாற வேண்டியது தான் போல//

ஹா ஹா ஹா!
எவ்ளோ ஜீவா உங்கூருல?
இங்கிட்டு 25 lb bag = $22.99

அரை கிலோ அரிசி முப்பத்தெட்டு ரூவா! :))

jeevagv said...

//இங்கிட்டு 25 lb bag = $22.99//
இங்கே இன்னும் மோசம்!
நேற்று, 20lb $28.99 க்கு வாங்கினேன்.
வேறு ஒரு கடையில், 'இனி இந்திய அரிசி இல்லை' என்று போர்டு மாட்டி விட்டார்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

//அடுத்த முறை வாழைப்பந்தலுக்கு உங்களை அழைத்துச் செல்லும் போது தேன் கலந்த தினை மாவைச் செய்யச் சொல்கிறேன்! :)//

சூப்பர்...

சாமையரிசி அப்படின்னு கூட ஒரு தானியம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது பற்றி யாருக்கேனும் தெரியுமா?...

RAM said...

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருதான் மயில் நடத்து குஹன் வேலே

அருமையான பதிப்பு நன்று

RAM said...

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருதான் மயில் நடத்து குஹன் வேலே

அருமையான பதிப்பு நன்று

Suresh vazhavalamudan said...

அருமையான பதிவு. நல்லது.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP