Monday, December 28, 2009

ஒரு தரம்! ரெண்டு தரம்! மூனு தரம்! - முருகா!

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்! இது கந்தர் அலங்காரம்! - இறுதி அலங்காரம்!

இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!


"பெருமாள்" என்ற சொல் வைணவச் சொல் ஆகி விட்டது! அதை நம் பாட்டில் நாமே பயன்படுத்தினால், நாம் out of focus ஆகி விடுவோமோ, என்றெல்லாம் கணக்கு போடத் தெரியாத ஒரு பேதை உள்ளம்! அது அருணகிரி உள்ளம்!
அது "பெருமாளே பெருமாளே" என்று தான் பல திருப்புகழையும், என் முருகனுக்காக முடித்தது!
அந்த உள்ளம் செய்யும் அலங்காரம் - இது கந்தர் அலங்காரம்!

அலங்காரத்துக்கு என்று தனித்த வலைப்பூ துவங்கினாலும்,
கந்தர் அலங்காரம் அங்கு முழு வீச்சுடன் நடைபெற முடியவில்லை! தக்க துணையின்றி, சில பல தொய்வுகளால், அலங்காரம் நின்றே போயிருந்தது!

அதான், தண்ணிக்கு, வாய்க்காலில் மடக்கு மாற்றி விடுவது போல், அதனை மாற்றி விடப் போகிறேன்!
அலங்காரத்தை, அடியவர்கள் யாரேனும், எப்போதேனும், ஏற்று நடாத்தித் தருவார்கள் ஆகுக!



அருணகிரி திருப்புகழ் பாடியிருக்காரு! அனுபூதி பாடியிருக்காரு! இன்னும் என்னென்னமோ பாடியிருக்காரு! ஆனால் இந்தக் கந்தர் அலங்காரத்துக்கு மட்டும் ஒரு "இனம் புரியாத" தனித்த பெருமை உண்டு! ஏன்-ன்னு உங்களுக்குத் தெரியுமா?


* திருப்புகழ் = தலம் தலமாக முருகனைக் கண்டு, உண்டு, வளர்த்துக் கொண்டார்! பயண மிதப்பில், சந்தமும் முந்திக் கொண்டு வந்தது!
* அனுபூதி = வளர்த்துக் கொண்ட அன்பை, நிலை நிறுத்திக் கொள்ளப் பாடு-கிறார்! பாடு-படு-கிறார்! அனுபூதி (அவனோடு என்றும் இருத்தல்) வேண்டப்படுகிறது!
* கந்தர் அலங்காரம் = ஆனால் வேண்டியது கிடைத்ததா? அன்பு "நிலை" கொண்டதா?? பதிவை முடிக்கும் போது சொல்கிறேன்! :)


அதற்கு முன்.....
அலங்காரத்தில் எனக்குப் பிடித்த, சில முக்கியமான பாடல்களைத் தந்து விடுகிறேன்! உங்களுக்கும் பிடித்து விடும்-ன்னே நினைக்கிறேன்!

பல பாடல்கள் காதல் கைகூட, திருமணம் கைகூட, பரிந்துரைக்கப்படும் பரிகாரப் பாடல்களாம்! (முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே)
ஹா ஹா ஹா! அம்மா, எதுக்கு கந்தர் அலங்காரதுக்கு, என் கிட்ட பொருள் கேட்டாங்க-ன்னு இப்போ புரியுதா? ஹைய்யோ! ஹைய்யோ! :)

இவை தினமுமே ஓதவல்ல பாடல்கள்! அவ்வளவு சுவை!
இறைவனுக்காக அல்ல என்றாலும் கூட, தமிழ்
இனிமைக்காக ஓதவல்ல அழகிய பாடல்கள்!
இந்த அழகுக்கெல்லாம் அங்கே பொருள் சொல்ல முடியாமற் போனது! இருப்பினும் இங்கே...

(தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே)


நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
!

அஷ்டமி-நவமி, செவ்வாய்க் கிழமை, இராகு காலம்,
அடுத்தவன் வைத்த தீவினை, ஏவல்-சீவல்,
நான் கூப்பிடா விட்டாலும், எனைத் தேடிப் பிடிச்சி, "நாடி வரும்" நவ கிரகங்கள்,
இவ்வளவு பேரு கிட்டயும் மாட்டிக்காம, "இன்பமா" இருக்கணும்-ன்னு ஏகப்பட்ட பரிகாரம்....
இறுதியாக வரும் கூற்றுவனாகிய எமன்! அவனுக்கு என்ன பரிகாரம்??? :)

* என் முருகன் எனக்கு இரு தாளைக் காட்டுகின்றான்! அதில் சிலம்பும் சலங்கையும் ஓம் ஓம் என்று அவர்களுக்கு ஒலித்துக் காட்டுகின்றான்!
* என் முருகன் எனக்கு ஆறு முகம் காட்டுகின்றான்= முகம் பொழி கருணை!
அவர்களுக்கோ அவன் தோளைக் காட்டுகின்றான்= மல்லாண்ட திண் தோள்!

இப்படி எனக்குக் காட்டுவதெல்லாம் நான் அவனைக் கொஞ்ச!
அவர்கட்கு காட்டுவதெல்லாம் அவர்கள் அவனைக் கெஞ்ச! அஞ்ச!


உண்மை நிலவரம் இப்படி இருக்க, நான் எதற்கு நாள்-கிழமை-கிரகம்-ன்னு பயப்பட வேணும்? அவன் தோளில் சூடிய கடம்ப மாலை! அது வெற்றி மாலை! அது எனக்கு முன்னே வந்து தோன்றிடாதா என்ன? இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!



ஆலுக்கு அணிகலம் வெண் தலை மாலை! அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய்! மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும், கடம்பும், கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும், சூரனும், மேருவுமே!

* ஆல மரத்தின் கீழ் அமர்ந்தவர் சிவனார்! அவர் சூடு மிக்கவர்! அவருக்கு குளிர்ச்சி தரும் வில்வம்! அவர் சூடிய மாலையோ மண்டையோட்டு மாலை!
* உலகம் உண்ட பெருவாயா - பெருமாள்! இவன் குளிர்ச்சி மிக்கவன்! இவனுக்கு, சாப்பிட்டால் சூடு தரும் துளசி! ஆனால் வெளியில் தண்-ணென்று குளிர்ந்து இருக்கும் துளசி மாலை!

மயில் ஏறும் என் ஐயன் முருகனுக்கோ, பலப் பல மாலைகள்!
* காலுக்கு = வானவர் கிரீடங்களே மாலை!
* தோளுக்கு = கடம்பப் பூ மாலை!
* கையில் வேலுக்கு = கடலும், மலையும், சூரனுமே மாலைகள்! அனைத்தும் வெற்றி மாலைகள்! வெற்றிகளே மாலையாகி விழுந்த வேல் மாலைகள்!


மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழ வைப்போன், வெய்ய வாரணம் போல்,
கை தான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!


வண்டுகள் மொய்க்கும் மலர் வள்ளியை அவனும் மொய்ப்பான்! :)
உமை அன்னை கொஞ்சிடும் குற்றால மலை இலஞ்சி முருகன்! இலஞ்சி என்னும் குளத்தில் உதித்த குகன்! இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சியில் அமர்ந்த பெருமாளே!

முத்தமிழால் திட்டினாலும், அச்சோ தமிழ் பேசுகிறானே என்று, ஆங்கே அப்போதே வாழ வைப்பான்!
தாழப் பேசியவனுக்கும் வாழப் பேசுபவன் என் முருகன்!

யானை போல் மதம் கொண்ட, இருபது கை இராவணனை....பத்து தலையும் "கத்தரித்தான்" - பேப்பரைக் கத்தரித்தால் எப்படி களேபரம் ஆகாமல், மென்மையாக, அதே சமயம் சரக் சரக் என்று கத்தரித்து விடுமோ, அது போல் "கத்தரித்தானாம்"! - ஏன்?

வைதாரையும் வாழ வைப்பான் என்று இதற்கு முன்னடியில் சொல்லிவிட்டு, "அழித்தான்" என்றா சொல்வது? அதான் "கத்தரித்தான்" என்கிறார்!

தையல்காரர் கத்தரிக்கும் போது பார்த்து இருக்கீங்களா? அய்யோ, காசு கொடுத்து வாங்குன துணியை இப்படிச் சரக் சரக்-ன்னு வெட்டுறாரே-ன்னு இருக்கும்! :)
ஆனால் அப்பறம் தான் தெரியும் - கத்தரிப்பது துணியை அல்ல! உதிரிகளைத் தான் என்று!

பயனற்ற உதிரிகளைக் கத்தரித்தால் தான், பயனுள்ள ஆடை வரும்!
அது போல் "கத்தரித்த" பெருமாள்!
தையல் காரப் பெருமாள்! ஒரு தையல் காத்த பெருமாள்!
அந்தப் பெருமாளின் மருகன்! என் ஆசை முருகன்!

* வைத சூரனை வாகனம் ஆக்கி, இன்று நம்மையும் அந்த மயிலை(சூரனை) தொழ வைக்கிறான்!
* வைத இராவணனை வாயிற் காப்போன் ஆக்கி, இன்று நம்மையும் ஜய-விஜயர்களை(இராவணனை) தொழ வைக்கிறான்!
இன்னும் ஒரு படி மேலே போய், இராவணனுக்குத் தன் சங்கு சக்கரங்களையும் கொடுத்து, கருவறை வாயிலில், இன்று நம்மையும் அவனைத் தொழ வைக்கிறான்!

அருணகிரி பாடுவதோ: வைதாரையும் ஆங்கே "வாழ" வைப்பான்!
ஆண்டாள், நம் தோழி பாடுவதோ: சிறு பேர் அழைத்தனவும் சீறி "அருளாதே"!


இப்படி மாயோனும் சேயோனும் அருளே செய்கிறார்கள்!
"கத்தரித்து" விடுகிறார்கள்! வைதாரையும் ஆங்கே வாழ வைக்கிறார்கள்!


இன்னும் சில கொஞ்சு மொழிப் பாடல்கள் இருக்கு...
ஆனால் அவை அத்தனைக்கும் பொருள் சொல்லாது,
பத்தி பிரித்து, பக்தி சேர்த்து, செல்கிறேன்!
பாட்டில், பத்தி பிரிச்சிட்டா, பக்தி வந்திடாதா? பொருள் வேறு சொல்லணுமா என்ன?

சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி
மால் வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளி மலை எனவே
கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி, கழுத்தில் கட்டு
நூல் வாங்கிடாது, அன்று வேல் வாங்கி, பூங்கழல் நோக்கு நெஞ்சே!


(கழுத்தில் கட்டு நூல் - இந்திரன் மனைவிக்கு மாங்கல்ய பலமாகிய தாலி வரம் அளித்தது - மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று!)

படிக்கின்றிலை, பழநித் திரு நாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற் கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சி தண்டை
கால் என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?


டேய், சும்மா ரோட்டோரம் அவளைப் பார்த்துவிட்டு, அவ உடம்பைப் பால்-ன்னு சொல்லுற, பேச்சைப் பஞ்சு-ன்னு கொஞ்சற! கண்ணு மீன் மீன்-ன்னு சீன் போடும் நீ... மனம் போன போக்கெல்லாம் போகும் நீ...

செந்திலோன் கை வேல்-ன்னு சொல்ல வாய் வரலை,
மயில்-ன்னு சொல்ல வாய் வரலை,
கொஞ்சும் சலங்கை இரு தாள்-ன்னு சொல்ல வாய் வரலை!
ஹைய்யோ மனமே! நீ எங்ஙனே முக்தி காண்பதுவே? :))

பரவாயில்லை! இனி அவளைக் கொஞ்சறதா இருந்தாலும்...சும்மா பஞ்சு மஞ்சு-ன்னு ஓவரா அளக்காம,
அவள் கண், செந்திலோன் கை வேல் என்று சொல்லு!
அவள் நடை, செந்திலோன் மயில் என்று சொல்லு!
அந்த வேலும் மயிலுமே உனக்குத் துணையாகும்! முக்தி காண்பாய் நீ!


இதோ...முடிவுக்கு வந்து விட்டேன்!....

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

இதுக்குப் பொருள் தேவையா என்ன? ஒரே ஒரு பொருள் தான்! பயந்த தனி வழிக்கு அவன் அருளே பொருள்! அவனே பொருள்! அவனே பொருள்!

கண்ணிலே அவன் பாதங்கள் வந்து தோன்ற, வாயிலோ முருகாஆஆஆ என்னும் நாமங்கள் வந்து தோன்ற...
முன்பு செய்த எத்தனையோ தவறுகளுக்கும், பாவங்களுக்கும் எத்தனை எதிரிகள் திரண்டு வரப் போகிறார்களோ?
அவர்களை எதிர்கொள்ள என்னிரு தோளா? பன்னிரு தோளா?

நான் பயந்து போய், தனி வழியில் செல்லும் வேளை வந்து விட்டது!
உற்ற துணை எல்லாம் மற்ற துணை ஆகி விட்டது!

இனி யார் தான் துணை?
சிகராத்ரி கூறு இட்ட வேல் துணை! சிகை விரித்தாடும் அந்த மயில் துணை!
பகர் ஆர்வம் ஈ என்னும் அந்தச் செந்தமிழ் மொழியால்
முருகாஆஆஆ என்னும் பேரே துணை! அவன் பேரே துணை!

பயந்த தனி வழிக்கு - முருகன் துணை என்று சொல்லாது, எதுக்கு வேலும் மயிலும் துணை-ன்னு சொல்லணும்?
* மயில் = சூரன் = ஆயிரம் தவறுகள் செய்து இருப்பினும், இன்று அவன் காலடியில்! அதே போல் நாம் ஆயிரம் தவறுகள் செய்திருப்பினும்...என்று மயிலைக் காட்டுகிறார் - Negative Inspiration!
* வேல் = ஞானம் = இருட்டு வழிக்கு ஒளி பாய்ச்சி, உடன் அழைத்துச் செல்வது! வேல் நம் மீது பட்டு, நம்மையும் அவனிடம் மயிலாய் அடைவிக்கும் - Positive Inspiration!

அதான் பயந்த தனி வழிக்கு, இரண்டு Inspiration!
பயந்த தனி வழிக்கு, வேலும் மயிலும் துணை! வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


* சந்தம் கொஞ்சும் திருப்புகழுக்கு இல்லாத ஒரு புகழ்
* அனுபூதிக்கு இல்லாத ஒரு நீதி
* கந்தர் "அலங்காரத்துக்கு" மட்டுமே உண்டு! அது என்ன?


அன்பர்களே, கந்தர் அலங்கார வலைப் பூவை இடம் மாற்றுகிறேன்! இங்கே செல்லுங்கள்! முடித்து வைக்கிறேன்! முருகா!

Tuesday, March 24, 2009

அலங்காரம்-18/19: அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!

மக்களே, கந்தர் அலங்காரப் பதிவுகள், கொஞ்ச நாள் பணி மிகுதியால் இல்லாமல் இருந்தது! மன்னிக்கவும்! அலங்காரம் பதிவில் தான் இல்லையே தவிர, முருகனிடம் இருந்ததே!
அலங்காரத்துக்கே அலங்காரம் சேர்ப்பவன் அல்லவா அழகன் முருகப் பெருமான்! அதான் இன்று அலங்காரம் செய்ய வந்து விட்டான்!

அம்மாவின் வேண்டுகோளின் படி எழுதத் துவங்கிய வலைப்பூ அல்லவா?
"என்னடா கொஞ்ச நாளா ஆளைக் காணோம்"-ன்னு ஒரு சின்ன அதட்டல் அலங்காரம் நடந்துச்சி! அடியேன் அலங்காரம் துவங்கி விட்டேன் :))




காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே-ன்னு சொன்னது யாரு? = பட்டினத்தாரா? அருணகிரியா??
பட்டினத்தார்-ன்னு நிறையப் பேரு சொல்வீங்க! இல்லை அருணகிரியார்-ன்னு நான் சொல்லறேன்! ஹிஹி! மேற்கொண்டு படிங்க!

* அருணகிரியார் பற்றி அப்பப்போ முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கேன்!
* பட்டினத்தார் பற்றி உங்களுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும்-ன்னு நினைக்கிறேன்!
அது என்ன - "அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!"?
இருவருமே சித்தர்கள் தான்! இருவருக்குமே அருள் உண்டு தான்! அப்புறம் என்ன இவருக்கு இல்லாதது, அவருக்கு உண்டு? கண்டு பிடிங்க பார்ப்போம்! :)

அருணகிரி காலத்தால் முந்தியவரா? இல்லை பட்டினத்தார் முந்தியவரா? இல்லை இருவரும் ஒரே காலமா?
ஏன் கேட்கிறேன் என்றால், அருணகிரிநாதர், பட்டினத்தார் பாடிய "அதே வரிகளைத்" தன் பாடலில் வைக்கப் போகிறார்! = காதற்ற ஊசியும் வாராது காண், கடைவழிக்கே!

ஆச்சரியமா இல்லை?
சென்ற பதிவில் பெரியாழ்வாரின் "மூவடி-தாவடி" வரிகளை அப்படியே எடுத்து வைச்சாரு அருணகிரி!
இந்தப் பதிவில் பட்டினத்துப் பிள்ளையின் "காதற்ற ஊசி" வரிகளை அப்படியே எடுத்து வைக்கறாரு!



நிறைய புலவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள்!
* சில பேரு தன்மானம், சுய கெளரவம் எல்லாம் பார்ப்பாங்க!
* சில பேரு "காப்பி அடிச்சிட்டாருப்பா"-ன்னு தங்களைப் பேசிடப் போறாங்களோ-ன்னு பயப்படுவாங்க!
* சில பேரு "இறை விஷயமே ஆனாலும், அவன் சொன்னதை நாம எதுக்குச் சொல்லணும்? நாம தனியா சொல்லுவோம்"-ன்னு கொஞ்சம் கெத்து காட்டுவாங்க!

ஆனால் அருணகிரி அப்படி அல்ல!
"இறைவனா? ஈகோவா?" என்றால்...அருணகிரிக்கு "இ" தான்! "ஈ" அல்ல!
ஆண்டாள்-பெரியாழ்வார் கூட அருணகிரி போலவே தான்!
திருக்குறள், சிலப்பதிகாரத்தில் இருந்தெல்லாம் எடுத்து, அப்படி அப்படியே போட்டுருவாங்க!

இறைவனை நினைந்து "உண்மையாலுமே" ஆழ்பவர்கள் அனைவரும், சக அடியார்களின் நூல்களையும், வாக்கையும், கருத்தையும் மிகவும் மதிப்பார்கள்! தங்கள் நூலை மட்டுமே பிடிச்சித் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்கள்!
எது கேட்டாலும், "நான் அந்த நூலில் அப்பவே சொல்லி இருக்கேனே, இந்த நூலில் இப்பவே சொல்லி இருக்கேனே" என்பது போன்ற வாசகங்கள் எழாது! மாறாக சக அடியவர்களை வெளிப்படையாகவே தம் நூலிலும் குறிப்பிடுவார்கள்! இது தான் அடியார் லட்சணம்!

"இறைவனா? ஈகோவா?" என்றால்...அவர்களுக்கு "இ" தான்! "ஈ" அல்ல!

இதை இங்கு சொல்லக் காரணம் உண்டு! அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் "பெருமாளே" என்று தான் முடிப்பார்! முருகப் பெருமானை அவர் ஏன் பெருமாளே என்று குறிப்பிட வேண்டும்?-ன்னு சில பேரு முன்பே கேட்டிருந்தாங்க!
அதற்கு விடை அறிந்து கொள்ள, அருணகிரியின் இந்த "அப்படியே எடுத்தாளும் அடியார் சுபாவம்" மிக உதவியாய் இருக்கும்! இப்போ ஞாபகம் மட்டும் வச்சிக்குங்க! இன்னொரு நாள் பார்ப்போம்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை
பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,
சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே!

மேலோட்டமாக....
வேதம், ஆகமத்தால் போற்றப்படும் முருகனின் திருவடிகளைக் காப்பாகக் கொண்டு
இரவு-பகல், சூது-வாது, பாப-புண்ணியம் என்று வேற்றுமைகள் இல்லாத நிலை = ஞானாந்தம்
அதில் இருந்து கொண்டு, சும்மா இரு, மனமே!
இந்த நிலையை உலகத்தார் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!

இனி பிரிச்சி மேயலாம்...
வேத ஆகம
= வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படும்
சித்ர வேலாயுதன் = சித்ர வேலாயுதப் பெருமான்

சித்ர வேலா? வெற்றி வேல், வீர வேல் தெரியும்! அது என்ன சித்ர வேல்? ஹா ஹா ஹா!
ஈழத்துக் கதிர்காமத்தில், முருகப் பெருமான் சிலை உருவில் இல்லாமல், சித்திர உருவத்தில் தான் இருக்கின்றான்! சன்னிதியில் ஓவியம் தொங்கும்! அதன் பின்னே ஷண்முக-ஷட்கோண (அறுகோண) யந்திரமும் உண்டு! ஆனால் நம் முன்னே அவன் ஓவிய ரூபன்! அவனே சித்ர வேலாயுதப் பெருமான்!

சித்ரம்-ன்னா அழகு என்ற பொருளும் உண்டு! அழகிய வேல் ஆயுதன்!
வேலால் அவனுக்கு அழகா? அவனால் வேலுக்கு அழகா? = இதுக்குப் பதில் சொல்வது வள்ளிக்கும் தேவசேனைக்குமே மிக மிக கடினம் :)

கொலைத் தொழில் மட்டுமே செய்யும் இன்றைய ஆயுதங்களான, ராக்கெட்-லாஞ்சர் எல்லாம் கூட, பார்க்க மட்டும் அழகாக வடிவமைக்கறாங்க-ல்ல?
அருள் தொழிலும், மருள் தொழிலும் சேர்த்தே செய்யும் வேல் அப்போ எம்புட்டு அழகா இருக்கணும்?
அதான் வேலனுக்கு வேலழக்கு! வேலுக்கு வேலனழகு! சித்ர வேலாயுதம்!

வெட்சி பூத்த = வெட்சிப்பூ பூத்த பாதங்கள்! வெட்சி புனையும் வேளே போற்றி என்பது கந்த சஷ்டிக் கவசம்!
தண்டை = தண்டை, ஜல்-ஜல் என்று ஒலிக்கும் பாதங்கள்! தண்டை அணி வெண்டையும், கிண்கிணி சதங்கையும் என்று திருப்புகழ்!

பாதார விந்தம் = அந்தப் பாத+அரவிந்தங்களை, திருவடித் தாமரைகளை...
அரணாக = காப்பாகக் கொண்டு! செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்பது பல்லாண்டு பாசுரம்!

அல்லும் பகலும் இல்லா = இரவு பகல் இல்லாத
சூதானது அற்ற = வஞ்சகம் இல்லாத
வெளிக்கே = ஆன்ம வெளியில்
ஒளித்து = ஒடுங்கி இருந்து
சும்மா இருக்க = எம்பெருமானோடு ஏகாந்தமாய் "சும்மா" இருக்க!

சும்மா இரு, சொல் அற என்றலுமே, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!
எல்லாம் இழந்து, சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல, எனை விட்டவா! - என்றெல்லாம் முன்னர் அருணகிரி பாடி இருந்தார் அல்லவா? "சும்மா இரு"-ன்னா என்ன?-ன்னு இந்தப் பதிவில் பார்த்தோம் அல்லவா? ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால் = "சும்மா" இருப்போம்!
என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!

போதாய் இனி மனமே = மனமே, இனி, அப்படியே நடவாய்! போதாய்! போந்தாரோ? போந்து எண்ணிக் கொள்!
தெரியாது ஒரு பூதர்க்குமே = இந்த நிலையை உலகத்தோர் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!


அடுத்த பாட்டு தான் பட்டினத்தார் இஷ்டைல் அருணகிரிப் பாட்டு = "உதவாது காண் கடை வழிக்கே"! :)


(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
வையில் கதிர் வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்! நுங்கட்கு, இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா, உடம்பின் வெறு நிழல் போல,
கையில் பொருளும், உதவாது காண் உம் கடை வழிக்கே!

மேலோட்டமாக...
கூர்வேல் முருகனை தினமும் வாழ்த்துங்கள்!
அடுத்து, உடைச்ச அரிசி அளவாச்சும், இல்லாதவர்க்கு உணவிடுங்கள்!
உங்க சொந்த உடம்பு தான் என்றாலும், அந்த உடம்பின் நிழல் உங்களுக்கே உதவாது!
உங்க சொந்த பொருள் தான் என்றாலும், அந்தப் பொருள் உங்கள் கடைவழிக்கு வாராது!

இப்போ, பிரிச்சி மேயலாம்...
வையில்
= வை+இல் = கூர்மை உடைய! வைவேல் என்றும் வேலைப் போற்றுவார்கள்!
கதிர் வடி வேலோனை வாழ்த்தி
= ஒளி வீசுமாறு வடிக்கப்பட்ட வேல்! ஒளி வீசுமாறு வடித்து வைத்தாற் போலே இருக்கும் வடிவேலன்! அவனைப் போற்றி...

வறிஞர்க்கு என்றும் = ஏழைகளுக்கு எப்போதும்
நொய்யின் பிளவு அளவேனும் = ஒரு நொய்யின் சிறிய பிளவாச்சும்
பகிர்மின்கள் = பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடுங்கள்!

நொய் பார்த்து இருக்கீங்களா? நொய்-ன்னா என்ன? சும்மா நொய் நொய்-ன்னு பேசறதா? ஹிஹி! உடைச்ச அரிசியை நொய்-ன்னு சொல்வது வழக்கம்!
நொய்க் கஞ்சி குடிச்சிருந்தா தெரியும்! நாம தான் இப்பல்லாம் Corn Flakesக்கு மாறிட்டம்-ல? :)

நொய்யும் கிட்டத்தட்ட கார்ன் ஃப்ளேக்ஸ் போலத் தான்!
அரிசி நொய்யோ, கோதுமை நொய்யோ, மோரில் விளாவி, கஞ்சி போல் ஆக்கித் தருவார்கள்! கொஞ்சம் கொத்தமல்லி கிள்ளிப் போட்டுக்கலாம்!
ரொம்ப சத்து மிக்கது! ரொம்ப டேஸ்ட்டாவும் இருக்கும்!

இப்பல்லாம் நொய் பாக்கெட்டிலேயே அடைச்சி விக்குது! இன்ஸ்டன்டா கலந்துக்கலாம்!
ஒரு முறை, காலையில் Corn Flakesக்கு பதிலா நொய்க்கஞ்சி குடிச்சிப் பாருங்க! எப்பவும் Corn Flakes மட்டுமே சாப்பிடுவதற்குப் பதில், ஒரு நாள் அதுவும், மறுநாள் இதுவும்-ன்னு மாறி மாறி சாப்பிட்டுப் பாருங்க! உற்சாகம் பீறிடும்! :)



இந்தக் காலத்தில் "கொடுத்து உண்பது" என்பது கொஞ்சம் அரிதாகி விட்டதல்லவா?
அவரவர் உணவை அவர்களே தேடிக்கணும்? இல்லீன்னா சோம்பல் தான் வளரும்? என்றும் பேசுகிறோம் அல்லவா?
மேலும் பிச்சை எடுப்பவர்கள் கூட இப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று எடுப்பதில்லை! வேறு வசதியான முறைகளுக்கு மாறிக் கொண்டார்கள்!
அப்புறம் எப்படி அருணகிரி சொல்வது போல் கொடுத்து விட்டு உண்பது? :)

சோம்பலை வளர்க்க பிச்சையாகப் "போடச்" சொல்லவில்லை, ஆன்மீகப் பெரியவர்கள்! கால வழக்கில் நாம தான் அப்படி ஆக்கி வைத்து விட்டோம்!
நல்லாப் பாருங்க! யாருக்குத் "பகிரச்" சொல்கிறார்? = வறிஞர்க்கு!
போடுதல், பகிர்தல் = இரண்டுக்கும் வேறுபாடு உண்டு!
நீங்கள் இன்று உணவு தந்து விட்டால், அதை உண்ட பின், அவருக்குப் பசி போய் விடுகிறது! இனி உழைக்க முடியும்! இனி அவர் வறிஞர் ஆக மாட்டார்!

இன்று உணவு கொடுத்தாலும், இன்று பசி போனாலும், நாளையும் பசியோடு, அதற்கு வழி அறியாமல் இருப்பவர்களே வறிஞர்கள்! பிஞ்சுக் குழந்தைகள்! வேறு சில ஊனம் கொண்டவர்கள்!
நான் கடவுள் திரைப்படம் - பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலைப் பார்த்திருப்பீர்கள் தானே?

அன்னதானம் என்பது ஆலயங்களில் வரும் பல தரப்பினருக்கும் தான்!
அன்று உணவகங்கள் இல்லாத நிலையில், பெரிய ஆலயங்களில் சத்திரமாகக் கட்டி வைத்தார்கள்! தொலைதூரத்துக்கு கட்டுச் சாப்பாடு கட்டிப் போக முடியுமா? அதான் இப்படி!
இங்கு உண்பவர் வறிஞராகத் தான் இருக்கணும் என்ற அவசியம் இல்லை! அறிஞராகவும் இருக்கலாம்! சிலர் உண்டு முடித்து, உதவித் தொகையும் கொடுத்துப் போவார்கள்!

கர்நாடக மாநிலம் தர்ம ஸ்தலாவில் இன்றும் நடக்கிறது!
நல்ல மேலாண்மை இல்லாததால் சத்திரங்கள், பின்னாளில் சோம்பேறி மடங்கள் போல் ஆகி விட்டன! உண்பவரே மீண்டும் மீண்டும் உண்பது வாடிக்கையாகிப் போனது!
மக்களும் கருணையால் கொடுக்காமல், தங்கள் பாவம் போக்கிக் கொள்ள, "தர்மம் தலை காக்கும்"-ன்னு எல்லாம் நினைத்து, இதை மறைமுகமாக ஊக்குவிக்கத் துவங்கி விட்டார்கள்! தர்ம வழியில் தாங்கள் செல்லாமல், இப்படி "தர்மம்" பண்ணுவது என்று ஆக்கி விட்டார்கள்! இதுவல்ல தருமம்!

இன்று காணும் அளவுக்கு, ஆலயக் கையேந்துபவர்கள் முற்காலத்தில் இல்லை! இப்போது தான் வாழ்க்கை முறை மிகவும் மாறிப் போய் விட்டது!
ஆலயச் சீர்திருத்தத்தில், இதையும் ஒரு இறைத் தொண்டாகவே கருதி, இந்தக் கொடுமையைக் களைய வேணும்! பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு அந்தந்த ஆலயமே பொறுப்பேற்றுக் கொள்ள வேணும்! ஆலய மேலாண்மைத் திட்டங்களை இதற்கும் வகுக்க வேணும்!

இறைவனுக்கு அலங்காரம் செய்து "அழகு பார்க்கும்" பக்தர்கள்/நிர்வாகம்...
இறைவன் உலா வரும் தெருக்களிலும், இந்தக் கொடுமையை நீக்கி, அழகு பார்க்க வேணும்! இதுவும் கந்தர் "அலங்காரம்" தான்!


நுங்கட்கு = உங்களுக்கு
இங்ஙன் = இங்கே, இப்பிறவியில்
வெய்யிற்கு ஒதுங்க உதவா = வெய்யிலுக்கு ஒதுங்கக் கூட லாயக்கில்லாத
உடம்பின் வெறு நிழல் போல் = உடம்பின் வெத்து நிழலைப் போல்!
உங்க உடம்பு தானே! ஆனா அதன் நிழல் உங்களுக்கு உதவுமா? அடுத்தவங்களுக்கு வேணும்னா அந்த நிழல் உதவலாம்! அதுவும் அந்த நிழல் கூடும், குறையும்! பெருசா உதவாது!

கையில் பொருளும் = அதே போல், உங்கள் கையில் இருக்கும் பொருளும்
உதவாது காண் உம் கடைவழிக்கே = உங்கள் இறுதி வழிக்கு ரொம்பவும் பெருசா உதவாது!

கடைசி வரை வருவது உங்க உடம்பு! அதன் நிழலே உங்களுக்கு உதவாத போது, அப்பப்போ வந்து போகும் பொருளா உங்கள் கடைவழிக்கு உதவப் போகிறது? காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!

அதுக்காக, கடைசிக் காலத்தில் பொருள் உங்களுக்கு வேணாம்-ன்னு சொல்லலை அருணகிரி! அவருக்கும் தெரியும் பெற்ற மக்கள், உற்ற மக்களை விடக் காசு தான் கடைசிக் காலத்தில் உதவும்-ன்னு! சொல்லப் போனால் கடைசிக் காலத்துக்கு அப்புறமும்,அனுப்பி வைக்க கொஞ்சம் காசு தேவைப்படும்! ஆனால் அதுக்கு அப்புறமும் கூட, அது உங்க கூடவே வந்துக்கிட்டு இருக்கும்-ன்னு நினைச்சிக்காதீங்க என்று தான் சொல்கிறார்! அதுக்கு அப்புறமும் = கடைவழிக்கு!

சாட்டிலைட்-ல இயங்கும் வங்கியில் போட்டு, ஜென்மா-டு-ஜென்மா ட்ரான்ஸ்பர் பண்ண முடியாது! :)
பிறந்த போது எப்படி வந்தோமோ, அதே போலத் தான் போகும் போதும்! எந்தக் கியாரெண்டியும் இல்லாமத் தான் வந்தோம்! எந்தக் கியாரெண்டியும் இல்லாமத் தான் செல்வோம்! அதனால் அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டு, அதிலேயே கிடந்து உழலாமல்...இயன்றவரை தன்னையும் காத்து, காக்க வேண்டியவரையும் காக்கச் சொல்கிறார்! காசை மட்டுமே கணக்கு போட்டு காக்காமல் விடாதே! அது வாராது காண் கடைவழிக்கே!


கேள்வியை மறந்துடாதீங்க: இலக்கியத்தில், அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு - அது என்ன? :)

Tuesday, February 3, 2009

அலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/வைணவ ஆண்டிகள்!

அந்தக் காலத்தில் புத்தகம், நூலகம் இதெல்லாம் இல்லாமலேயே, மற்ற ஏடுகளைப் படி எடுத்து வச்சி, படிக்கும் பழக்கம் இருந்திருக்கு போல! பாருங்களேன், ஆண்டாள் வள்ளுவரையும் இளங்கோவையும் வாசித்து, அதே வரிகளை அப்படியே பாட்டில் கையாளுறா!

அருணகிரியும் அதே போல பல நூல்களை ஆர்வமா படிச்சி வச்சிருக்காரு போல! சைவ நூல்களை மட்டுமல்ல! வைணவ நூல்களையும்!
ஆழ்வார்களின் வரிகளை அப்படியே தம் பாட்டில் எடுத்துக் கையாளுகிறார்! ஆர்வம் தானே காரணம்!

நீரளவே அகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம்! அதுவும் இணைய உலகில், திரையில் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, நல்ல புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிப்போம்!

மாயோனின் மாயத்தில் மயங்காத மனம் உண்டா என்ன? கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள? :)
இன்னிக்கி கந்தர் அலங்காரத்தில், கந்தனுக்கு அலங்காரம் இல்லை!
என் ஆருயிர்க் கண்ணனுக்கு அலங்காரம்! செய்வது யாரு?


வேற யாரு? கேஆரெஸ் தான் ஆனா-வூனா கண்ணனை இழுத்துக்கிட்டு வருவான்!-ன்னு அவசரப் படாதீங்க மக்கா! கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல! திருமுருகச் செம்மல் அருணகிரிநாதர்!
ஓங்கி உலகளந்த உத்தமனை, ஓங்கி அலங்காரம் செய்கிறார் அருணகிரி! நாமும் பார்க்கலாமா? :)




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!


மேலோட்டமான பொருள்: மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டான் ஒரு சின்னக் குழந்தை! அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின! பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன்! அவனுக்கோ சிறிய திருவடிகள்!
அந்தச் சிற்றடிகள், தேவர் தலையிலும், மயில் மேலும், என் பாடல்கள் மேலும் பதிந்துள்ளதே!

பிரிச்சி மேயலாமா?
அது என்னாங்க தாவடி? தாவடி ஓட்டும் மயில்=முருகன் ஓட்டும் மயில்! அப்போ தாவடி=முருகன்? முருகனுக்கு இன்னொரு பேரு தாவடியா? ஹா ஹா ஹா!

ஆனால் பெரியாழ்வாரும் தாவடி-ன்னு சொல்றாரே! அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி! அப்படீன்னா ஆழ்வார் பாசுரம் அத்தனையும் அருணகிரிக்கு அத்துப்படி-ன்னு தானே அர்த்தம்?

ஆழ்வார் சொல்லும் தாவடியைப் பாருங்கள்:
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று,
"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!
தரணி அளந்தானால் இன்று முற்றும்!

அருணகிரியாரின் நூல் வாசிப்பு எப்படிப் பரவிப் படர்ந்து இருக்கு-ன்னு பாருங்க!
ஆரம்ப கால வாழ்வில், சுகபோகத்தில் திளைத்தாலும், புத்தகம் படிக்கற நல்ல பழக்கத்தை மட்டும் அருணகிரி விடலை போலிருக்கு!

பின்னாளில் தொழுநோய் வந்த போதும் அது தான் கை கொடுத்தது! தியானத்தில் அமர்ந்த பின்னும் அது தான் கை கொடுத்தது!
"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்" என்று அவரே சொல்கிறார்! அந்தக் கல்வியின் பயனைத் "தாமே பெற வேலவர் தந்ததினால்"...திருப்புகழ் விளைந்தது! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க பழகிப்போம்!


"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!

இரண்டாம் அடியில் தான் தாவடி இட்டானாம்! இப்போ சொல்லுங்க! தாவடி-ன்னா என்ன?

முதல் அடியில் நம்முடைய பூமியை அளந்தான்! அது எளிது! ஏன்னா அவன் பூமி மேலேயே நிற்கிறான்!
இரண்டாம் அடிக்கு, ஆகாசம் பயணப்படணும்! அங்கே, தான் மட்டும் தனியாப் போய், அளந்துட்டு வர முடியுமா? சாட்சி கேட்பார்களே! என்ன செய்யலாம்?

ஆங்...கீழே இருந்தே, "தாவி" அளக்கலாம்! காலை உசரமாத் "தாவுவது" போல் தூக்கி, தாவி அளக்கலாம்! "தாவி" அடியால் அளக்கலாம்! "தாவடியால்" அளக்கலாம்!
* தாவடி புரிஞ்சுதுங்களா? தாவி வரும் அடி = தாவடி!
* முருகனுக்கு காவடி! பெருமாளுக்குத் தாவடி!
* அடியார்கள் குறை தீர்க்க, தாவி வரும் அடி = தாவடி!

பெருமாள் திருட்டுப் பய! அயோக்கியப் பய! குழந்தையா வந்து மூனு அடி மண்ணு கேட்டுப்புட்டு, இப்படி மொத்தமா வளைச்சிக்கிட்டானே? - இதுவா சாமியின் லட்சணம்? அப்படின்னு சில பேரு மனசுக்குள்ள நினைச்சிப்பாங்க! சிலர் வெளிப்படையாவே ஏசுவாங்க! :)
ஆனால் உண்மை என்ன? பெருமாள் ஏமாத்தினாரா? = இல்லை! அருணகிரியே சொல்றாரு!

மகாபலிக்கு பூமி முழுசும் சொந்தமா என்ன? இல்லையே! பூமியில் ஒரு பெரும் பகுதிக்கு அவன் அரசன்! அவ்ளோ தான்! அவனைத் தவிர இன்னும் பல அரசர்கள் பூமியில் இருந்தார்கள்!
பூமியே முழுசும் சொந்தம் இல்லாத போது, விண்வெளி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்கள் எல்லாமுமா மாவலிக்குச் சொந்தம்? இல்லை அல்லவா!

அப்படியிருக்க, மாபலிக்கு உரிமை இல்லாத ஒன்றில் எப்படி அவனை ஏமாற்ற முடியும்?
மாவலிக்கு உரிமை இல்லாத நிலங்களையும் பெருமாள் சேர்த்தே தான் அளந்தார்! ஏன்?

நிலத்துக்கு உரிமையாளர், தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டாலும், அப்பப்போ சென்று, அளந்து, வேலி காத்து வருவார்! அதே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான்! தன் திருவடி சம்பந்தம் நமக்குச் செய்வித்து, நம்மை உரிமை கொண்டாட வந்தான்!



1. மொத்த உலகங்களுக்கும் தன் திருவடி சம்பந்தம் செய்து வைக்கணும்!
2. மக்கள் பாவம் தீர்க்கும் கங்கை என்னும் ஆற்றை, உலகுக்குத் தரணும்!
3. பிரகாலாதனின் பேரனான மாவலியைக் கொல்லாது, அவன் ஆணவத்தை அடக்கி, அவன் பிள்ளை நமுசி பெண்களுக்குச் செய்த அட்டகாசங்களையும் அடக்கணும்!

ஒரே கல்லில் மூனு மாங்கா அடிப்பது எப்படி? :)
இறைவனே குழம்பி நிற்கும் போது, அவன் உதவிக்கு வந்தன அவன் திருவடிகள்!

1. முதலில், அந்தச் "சிறிய திருவடி", "பெரிய திருவடி" ஆகி, நம் மொத்த பேருக்கும் திருவடி சம்பந்தம் செய்து வைத்தது!

2. பின்பு, "பெரிய திருவடி", "தாவடியாகி", மேலே எழுந்தது! நான்முகன் "தாவடியை" நீராட்டினார்!
விண்வெளியின் ஆவரண நீர், மேலே பிரம்மன் விடும் நீர், கீழே மாவலி தாரை வார்க்கும் நீர் என்று மூன்றும் ஒரே தாரையாகப் பாய, பெருமாள் திருவடிகளில் கங்கை உற்பத்தி ஆனது!

3. மாவலியைக் கொல்லாது, அவன் மும்மலத்தின் முதல் மலமான, ஆணவத்தை அழித்தது!
அவதாரம்-ன்னாலே அழித்தல் என்பது போய், "அழிவு இல்லாத அவதாரம்" என்று செய்து வைத்தது! மாவலிக்கு முன்பு இருந்ததை விட பெரிய அரசை, மொத்த பாதள அரசையும் கொடுத்தது!

இறைவனையே கொலைத் தொழிலில் இருந்து தடுத்து, அருள் தொழிலில் ஈடுபடச் செய்தது திருவடிகள்!
தாவில் கொள்கை-ன்னு நக்கீரர் பாடுவார்! தாவு=குற்றம்!
* தாவு இல்லாத அடி = தாவடி!
* நம்மிடம் தாவி வரும் அடி = தாவடி!
* உன்னடியை எனக்குத் "தா-அடி" என்று நாம் கேட்கும் = தாவடி!

* நம் நெற்றியில், நாம் தான், திருவடிகள் (நாமம்) தாங்கியிருக்கோம்னா,
* தன் நெற்றியில், இறைவனே, திருவடிகள் (நாமம்) தாங்கிக்கிட்டு இருக்கான்!
இது தான் திருவடிப் பெருமை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார் இறைவன் "அடி" சேரா தார்!


படி மாவலி பால் = மாவலியிடம்,
மூவடி கேட்டு = மூன்று அடி கேட்டு,
அன்று மூது = அன்று, முதியதாய், (பல காலம் இருந்த விண்வெளி)
அண்ட கூட முகடு முட்ட = அண்ட சராசரங்களின் முகடு (உச்சி) முட்டும் படியாக,
சேவடி நீட்டும் பெருமான் = சேவடியை நீட்டினான் "பெரு"மான்! "ஓங்கி" உலகளந்த உத்தமன்!
மருகன் = அவனின் ஆசை மருமகன் முருகன்!

தன் சிற்றடியே = முருகக் குழந்தையின் சிற்றடிகள்! வாமனக் குழந்தைக்கோ பெரிய திருவடி! முருகக் குழந்தைக்கோ சிறிய திருவடி! இருவருமே ஆண்டிக் கோலம் தான்! :)

இரு ஆண்டிகள்! பெரிய திருவடிகள், சிறிய திருவடிகள்


தாவடி = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்

ஓட்டும் மயிலிலும் = அவன் ஓட்டும் மயில் மேல் பாதம் பட
தேவர் தலையிலும் = தேவர்கள் தலையில் பாதம் பட
என் பா அடி ஏட்டிலும் = என் பாக்களான திருப்புகழ் ஏட்டிலும் பாதம் பட
பட்டது அன்றோ = அவன் திருவடி சம்பந்தம் பட்டவன் ஆனேனே!

இங்கே அருணகிரியார் தன்னைத் தானே மாவலிக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் என்றும் சிலர் சொல்லுவர்! //மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாட்சியாகத் தத்தம் ஆணவம் கீழ் அடக்கப்பட்டு, இறைவன் திருவடி முத்திரைப் பெற்று ஏற்று கொள்ளப்பட்டனர்// - என்பது சைவ சித்தாந்த நூல்களில் இருந்து வாரியார் சுவாமிகள் காட்டுவது!

மாவலி போல் செல்வம் நிரம்பிய அருணகிரி, உடல் தனதே என்ற ஆணவத்தில் அழுந்திப் பாவங்களே புரிய, உடல் சுகம் என்னும் ஆணவம் அடக்கி, தன் அடிக்கீழ் அழுத்திக் கொண்டான் முருகன்! மாவலித் தலைமேல் மாமன் வைத்தாற் போல், அடியேன் தலைமேல் மருகன்-முருகன் வைத்தானே என்று கொண்டாடுகிறார் திருமுருகச் செம்மல், அருணகிரிநாதர்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
தடுங்கோள் மனத்தை! விடுங்கோள் வெகுளியை! தானம் என்றும்
இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்! எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

மேலோட்டமான பொருள்:
மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்! தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்! இப்படி இருந்தால்...
ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!

கொஞ்சம் விரிவான பொருள்:
தடுங்கோள் மனத்தை = மனசைத் தடுக்கணும்! யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல? (ஈழத்து நிலைப்பாட்டுக்கு அண்மையில் தன் இன்னுயிர் தந்த முத்துக்குமார் தான் நினைவுக்கு வரார்)! அதே போல், தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!

விடுங்கோள் வெகுளியை = வீண் கோபத்தை விடணும்! உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!

தானம் என்றும் இடுங்கோள் = கெடுவாய் மனனே கதி கேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்! -ன்னு அனுபூதியிலும் தானம் இடச் சொல்லுவாரு!
ஐயமும் பிச்சையும் ஆந் தனையும் கைகாட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!

இருந்தபடி இருங்கோள் = முன்னேறாம அப்படியே இருந்தபடியே இருங்கோ-ன்னா சொல்றாரு அருணகிரி? இல்லை இல்லை!
* முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே!
* முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு! முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!

இப்படி இருந்தாக்கா...
எழு பாரும் உய்ய = ஏழ் உலகும் உய்ய
கொடும் கோபச் சூருடன் = கோபச் சூரனையும்
குன்றம் திறக்க = அவன் தம்பி தாரகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! அவனையும் தொளைக்க = அவர்களைத் துளைக்க
வை வேல் விடுங்கோன் = கூர் வேலை விட்டவன், முருகன்!

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் = அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்!
இருந்தபடி இருங்கோள்! அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!
மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!

Tuesday, January 27, 2009

அலங்காரம்-14/15: சப்பாணி! மயிலு! முருகா!

சப்பாணியா? அப்படீன்னா என்ன? ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா? தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா?
அது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன? :)

சப்பாணி-ன்னா என்னாங்க? எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது? சப்பாணியா யார் வருவா? சொல்லுங்க பார்ப்போம்! :)
"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும்! காசு கொடு"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி! நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு! அடடா, என்ன ஒரு படம்!

முருகனும் ஒரு சப்பாணி தான்! :) முருகா சப்பாணி கொட்டாயே!



சப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்!
சின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம்! ஆனா நடக்காதுங்க! பொத்துன்னு விழுந்துருங்க!
உடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும்! பொக்கையாச் சிரிக்கும்! கூல் பேபி கூல்...என்பது போல! :)

இதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது!
பரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம்! ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெரியாழ்வார்! அவர் தான் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி!

புட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,
அட்டி அமுக்கி அகம்புக் கறியாமே!
சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி! கொட்டாய் சப்பாணி!
- என்று பாடுகிறார்!

பின்னாளில் இதை பிள்ளைத் தமிழ் என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்!
சப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம்! பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்!
அருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு! பார்க்கலாமா?



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!


மேலோட்டமான விளக்கம்: சிவனைத் தன் பாகத்தில் வைத்த உமையன்னை! அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள்! அதில் மணிகள் கிண்-கிண் என்று ஒலிக்க...
குழந்தையின் ஒலியைக் கேட்டு அரக்கர் நடுங்கினர்! எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது! அமரர் அச்சம் நீங்கியது!

பிரிச்சி மேயலாமா?
ஒருவரைப் பங்கின் உடையாள் = ஆகா! ஈசன் உமையன்னைக்கு இடம் கொடுத்தாரா? இல்லை உமையன்னை ஈசனுக்கு இடம் கொடுத்தாங்களா?
சிவபெருமான் தானே, தனது இடப் பாகத்தை ஈந்து, அர்த்த நாரி, மாதொரு பாகன்-ன்னு பெயர் எல்லாம் பெற்றார்? இங்கே அருணையார் மாத்திச் சொல்லுறாரே! சரியான Spin Doctorஆ இருப்பாரோ நம்ம அருணகிரி? :)

ஒருவரைப் பங்கின் உடையாள் = தன் பாகத்தில் ஒருவரை உடையாள்! ஆணொரு பாகி! :)
மாதொரு பாகனா? ஆணொரு பாகியா? - தீர்ப்பு சொல்லுங்க மக்களே!

குமாரன், உடைமணி சேர் திரு அரை, கிண் கிணி அசை பட = யாரெல்லாம் இன்னமும் அரை ஞாண் கட்டி இருக்கீக? கையைத் தூக்குங்க! :)

பிள்ளைகளுக்கு வெள்ளிக் கொடியில் அருணாக்கயிறு செய்து போடுவது வழக்கம்! (அரை ஞாண் கயிறு; ஞாண்-ன்னாலும் கயிறு-ன்னாலும் ஒன்னு தான்; அதனால் அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதுமானது)
அரை ஞாண் தான் Dividing Line! அதுக்கு மேலே தங்கம் போடலாம்! அதுக்குக் கீழே தங்கம் கூடாது!
அந்த அரை ஞாணில் இலை ஒன்னு செஞ்சி தொங்க விடுவாய்ங்க! எதுக்கு? :)

இன்னும் கொஞ்சம் வசதிப்பட்டவுக, உடைமணி-ன்னு செஞ்சி, நிறைய தொங்க விடுவாங்க! முருகன் வசதிப் பட்டவன் தானே! அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல? :) அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா! :))

குழந்தை அசையும் போதெல்லாம் உடைமணி கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும்! இன்னும் நடக்க ஆரம்பிக்கலை! அதனால் காலில் மணி கட்டிப் பயனில்லை! அதான் இடுப்பில் மணி! டங், டங், டங் - டிங், டிங், டிங்! டகு டகு - டிகு டிகு! டங்கு டிங்குகு!

திடுக்கிட்டு அரக்கர் வெருவர = வெருவுதல்? என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நாம சும்மா மக்களை ஓட்டும் பொருட்டு, கேலி பேசுவோம்-ல! சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு! :) அதே போல அருணகிரியும் சொல்றாரு! அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க! :)

திக்கு செவிடு பட்டு = எட்டுத் திசையும் காதடைக்கும் படி
எட்டு வெற்பும் = எண் திசை மலைகளும் (என்னென்ன?)
கனக பருவரை குன்றும் = பொன் மலையான மேருவும் (இது எங்க இருக்கு?)
அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே = சும்மா அதிருதல்ல? அதனால் அமரர் பயம் தீர்ந்தது!

இப்படி முருகனின் ஓசை ஒரு சாரார்க்கு அச்சம் கொடுக்குது! இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது! அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்! முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!


மேலோட்டமான பொருள்:
இழிவான வாழ்க்கை! அதில் கூத்தாடும் ஐம்புலன்கள்! அதில் ஆடி ஆடிக் கலக்கம் அடைந்த அடியேன்! ஆனால் நான் பாச நெஞ்சன்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!
எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க, சப்பாணி கொட்டி-கைத்தட்டி விளையாடும் கந்தக் குழந்தாய்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!

பிரிச்சி மேயலாமா?
இந்தப் பாட்டு தான் முன்பு சொன்ன சப்பாணிப் பருவப் பாடல்!

குப்பாச = கு+பாசம் = இழிவான பாசம்! பாசத்தில் என்னங்க இழிவு?
சுயநலம் போர்த்திய பாசம்! அதான் இழிவு! பணத்துக்காக, படை பலத்துக்காக, வெளீல பாசம் காட்டிக்கறது! ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது! இதான் குப்பாசம்! நப்பாசையால் வந்த குப்பாசம்!

வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் = இந்தப் போலியான பாச நாடகத்தில் அஞ்சு பேரு டான்ஸ் ஆடுவாங்க!
* கண் = பார்வை = என் பார்வைக்கு என்ன படுதோ, அதான் சரி! அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம்! நான் அப்படித் தான் இருப்பேன்! நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும்! :)
* காது = கேட்டல் = என்னைப் புகழ்ந்து, என் சார்பா மட்டும் தான் பேசணும்! நான் விரும்புவேன்! அதையே நீயும் பேசணும்!
* நாக்கு = ருசித்தல் = என் ருசியே எனக்கு முக்கியம்! நல்ல ருசியா? தீய ருசியா? - கவலையில்லை! எனக்குப் பிடிச்ச ருசியா! அது போதும்!
* மூக்கு = வாசனை = என் காரியத்துக்கு மட்டுமே தான் மூச்சு விடுவேன்! அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன்! ஊருக்கே நாறினாலும், எனக்கு மட்டும் வாசனை!
* உடல் = உறவு = உணர்ச்சி = பாசம் காட்டுவது போல் உடலாடுவேன்! ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல! தன்னை இழக்கும் கூடல் அல்ல! தன்னை மட்டும் தீர்த்துக் கொள்ளும் சுயநலக் கூடல்!

அருணகிரி இப்படியெல்லாம் இருந்தவர் தான்! ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை! ஆனால் பரத்தையரோ அவரை ஒதுக்க, மனைவியை அவர் மிதிக்க......
கடைசியில் சொந்த அக்காவே, "வேண்டுமானால் என்னைச் சுவைத்துக் கொள்", என்ற போது தான் அருணகிரி நெஞ்சில் வேல் பாய்ந்தது! வேல் பாய்ந்த நெஞ்சில் வேல்முருகன் பாய்ந்தான்!

கொட்பு அடைந்த = கலக்கம் அடைந்த மனசு! அதிலேயே ஊறி ஊறி இருந்தா, குளம் கலங்கலாத் தானே இருக்கும்?
இப் பாச நெஞ்சினை ஈடேற்றுவாய் = குப்பாசம் இல்லாமல் இப்பாசம், இறைப்பாசம் கொண்டேன்! முருகா! முருகா! முருகா! என்னை ஈடேற்றுவாயே! ஈடேற்றி, வீடேற்றுவாயே!

ஈடு-ன்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்! ஈடேறுதல்-ன்னா என்ன?

இரு நான்கு வெற்பும், அப் பாதியாய் விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய = அட! முன்பு சொன்னதே தான்! எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க!
குழந்தையிடம் பேசுவதால் அதே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்றாரு போல அருணகிரி! :)

சப்பாணி கொட்டிய = இரண்டும் கையும் தட்டித் தட்டிச் சப்பாணி கொட்டுறான் முருகக் குழந்தை!
அவன் நடை பழகி, கீழே விழலை! நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம்! ஆன்மீகம், மோனம், சாதனை-ன்னு என்னென்னமோ சொல்லி, ஆனால் இறை அன்பை மட்டும் மறந்துடறோம்!

நம் ஆன்மீக நடை பாதையில் நாம் வீழ, அந்தக் குழந்தை பொக்கை வாய்த்தனமாய்ச் சிரிக்கிறது! சப்பாணி கொட்டுகிறது!
சப்பாணி கொட்டாயே சண்முகா, சப்பாணி கொட்டாயே!
என்னைப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!



கை ஆறிரண்டு உடை சண்முகனே = ஆறிரு கைகள்! பன்னிரு கையால் பாலனைக் காக்க! சரணம் சரணம் சண்முகா சரணம்!

முருகப் பெருமானின் திருக்காட்சியைச் சொல்லும் போது, இந்தப் பன்னிரு கர வர்ணனையைச் சொல்வதுண்டு! ஆறு முகம்! ஆறிரு தடந் தோள்!
* முருகனுக்கு முகங்கள் ஆறு! = தமிழ் வல்லின, மெல்லின, இடையினங்கள் ஆறு!
* முருகனுக்கு கரங்கள் பன்னிரண்டு! = தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு!
* முருகனுக்கு கண்கள் பதினெட்டு! = தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு!
* முருகனுக்கு உண்டு ஒரு ஆயுதம் - வேல்! = தமிழுக்கும் உண்டு ஒரு ஆயுதம் - ஃ
இப்படி உருவிலேயே தமிழாய் நிற்கிறான் முருகப் பெருமான்! தமிழ்க் கடவுள் முருகவேள் போற்றி போற்றி!

இது மிகவும் நயமான வர்ணனை! எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! இலக்கிய நயத்துக்காகச் சொல்லிய வர்ணனை! அவ்வளவு தான்!
ஆனால் இதை வைத்து, முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்-ன்னு நிலைநாட்டப் பார்ப்பார்கள் சில பேரு! அதை நினைச்சி நினைச்சி, எனக்கும் முருகனுக்கும் சிரிப்பு தான் வரும்! ஹா ஹா ஹா! :) இங்கே பாருங்க! :)

இந்த ஆறு தலை, பன்னிரெண்டு கை, பதினெட்டு கண் - இதெல்லாம் தமிழ் மரபுப் படி, எந்தவொரு தமிழ் நிலத் தெய்வத்துக்கும் இல்லை!
அது குறிஞ்சி சேயோன் ஆகட்டும், இல்லை முல்லை மாயோன் ஆகட்டும்! இருவருமே இயற்கைத் தெய்வங்கள்! இயற்கையான உருவம்! இயற்கையான வழிபாடு தான்!

இப்படிப் பல கைகள், பல தலைகள், இவை எல்லாம் பின்னாளில் வடமொழிப் பண்பாடும், தென்தமிழ்ப் பண்பாடும் கலந்த பின், வடவர் கதைகளில் இருந்து தோன்றியது-ன்னு தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் இவர்களே சொல்லுவாங்க!

அப்படி இருக்க, பன்னிரெண்டு கரம், எப்படி பன்னிரண்டு உயிர் எழுத்து ஆகும்? பதினெட்டு கண், எப்படி பதினெட்டு மெய் எழுத்து ஆகும்?
12, 18 எல்லாம் வடவர் கதையில் ஸ்கந்தன் ஆயிற்றே! அவன் எப்படி, இப்படி விதம் விதமா நம்பர் கணக்கு காட்டினான்? ஸ்கந்தன் எப்போ ரிவர்ஸ் கியர் போட்டுத் தமிழ்க் கடவுள் ஆனான்? ஹா ஹா ஹா! அதாச்சும் தனக்குப் பிடிக்கும் பட்சத்தில் வடமொழிக் கட்டுக் கதைகள் ஓக்கே! ஆனால் மற்ற நேரங்களில் ஓக்கே இல்லை! :))

இந்த மாதிரி நம்பர் கணக்கை எல்லாம் வைத்துத் தான் முருகனைத் தமிழ்க் கடவுளாக நிலை நாட்டணும்-ன்னு அவசியமே இல்லை!
தமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் முருகப் பெருமானை அழகாக நிலை நாட்டிச் சென்று விடுகிறார்!

மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மை-வரை உலகமும் - என்று தொல்காப்பியமே முழங்குகிறது!
திருமாலான மாயோனையும், முருகனான சேயோனையும் தமிழ்க் கடவுள்களாகக் காட்டி முழங்குகிறது! இவர்களுக்கு மட்டுமே ஆலயங்களும், பூசைகளும், மக்கள் வழிபாடும், குரவைக் கூத்துகளும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!
(குறிப்பு: இந்திரனும், வருணனும் வெறும் நிலத் தெய்வங்களாகவே சொல்லப்பட்டு, மக்கட் தெய்வங்களாகச் சொல்லப்படாததால்...இவர்கள் தமிழ்க் கடவுள், தமிழர் கடவுளாக ஆகவில்லை!)

சப்பாணி கொட்டாயே முருகா, சப்பாணி கொட்டாயே!
தமிழ்க் கடவுளாய், உன் திருமுகத்தில் அழகு பொங்கச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!

Tuesday, January 20, 2009

அலங்காரம்-12/13: முருகனின் மயில்! சேவல்! குதிரை?

ஒரு மாத சூறாவளி திருப்பாவைப் பதிவுகளினால், கந்தரலங்காரப் பதிவுகள், தடைபட்டுப் போயிருந்தன! கோதை முருகனுக்கு மாமியாச்சே! மறு பேச்சு பேசுவானா நம்ம பய புள்ள? மாமியாருக்காக காத்துக் கிடப்பானே! உருகிப் போயிருவானே! மறுபேச்சு பேசவும் முடியுமா என்ன? :)

தமிழ்க் கடவுள் முருகவேள், தன்னிகரில்லாக் கோதைத் தமிழுக்கு வழி விட்டு காத்துக் கிடந்தான்! அன்பு சேர்த்துக் கிடந்தான்! உடல் வேர்த்துக் கிடந்தான்!
இன்னிக்கி மீண்டும் முருகனுக்கு அலங்காரத்தைத் துவக்கலாம்-ன்னு நினைச்சேன்! ஆகா, வந்த அலங்காரச் செய்யுளும் அதே மனநிலையில் தான் இருக்கு = இடைபட்ட, தடைபட்ட-ன்னு வருது!

சென்ற பகுதியில் சும்மா இருத்தல்-ன்னா என்ன-ன்னு பார்த்தோம்!
* நடக்க வேண்டியதை/இறைவனை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்....."சும்மா" இருக்க முடியும்-ன்னும் பார்த்தோம்!
* இந்தப் பகுதியில் அப்படிச் சும்மா இருக்கும் மனத்தில், முருகன் எப்படி வந்து குடி இருக்கிறான்-ன்னு பார்க்கலாமா?

என்னாது? முருகன் குடி இருக்கானா? இது வரை ஒத்த ரூவா கூட வாடகையே கொடுத்ததில்லையே-ன்னு ஆச்சர்யப்படக் கூடாது! :)
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்! குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தர வேண்டும்?

வாங்க பார்க்கலாம்...முருகன் மயில் மேல் பறந்து வரும் அழகுக் காட்சியை!




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

குசை நெகிழா வெற்றி வேலோன்! அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு! அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!


மேலோட்டமான பொருள்:
வெற்றி வேல் முருகன் மயில் மேல் பறந்து வருகிறான்! கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது! அசுரர்களின் குடல் கலங்கும்படி ஒரு வேகம்!
தோகைகள் பரபர-ன்னு அசைய, பெரிய காற்று! மேரு மலையே அசைகிறது! கடலே வற்றி மேடாகிறது!

பிரிச்சி மேயலாமா?
குசை நெகிழா வெற்றி வேலோன் = குசை-ன்னா கடிவாளம்! கடிவாளம் நெகிழாமல், தளராமல் பிடித்து ஓட்டிக்கிட்டு வரான் வெற்றி வேலன்! யாரை?
அட, கடிவாளம்-ன்னா குதிரைக்குத் தானே இருக்கும்! முருகன் குதிரை எல்லாம் கூட ஓட்டுவானா என்ன?

அடங்கொப்புரானே! அவன் மாமன் கள்ளழகரு தான் குதிரை மேல வருவாரு! பரி மேல் அழகரு! மருமகன் எப்போ குதிரை ஏறினான்?
ஹிஹி! முருகன், பரியாரை ஓட்டலை! மயிலாரை ஓட்டிக்கிட்டு வாரான்! :)

மயிலையே குதிரை போல ஓட்டிக்கிட்டு வாரானாம்! சும்மா அப்படியே கற்பனைப் பாருங்க! டொடக்-டொடக்-ன்னு மயிலாரு விசிறி விசிறி வாராரு!
கூர் மூக்கை அப்படியும் இப்படியும் திருப்பி, சவுண்டு விட்டுக்கிட்டே வாராரு!
தோகையெல்லாம் சும்மா ஜிவ்வுனு காற்றில் பறக்குது! அப்படி ஒரு ஓட்டம்! கடிவாளம் புடிச்சும் புடிக்காத ஓட்டம்!

அவுணர் குடர் குழம்ப = அசுரர்கள் குடல் நடுங்குது, இந்த வேகத்தைப் பார்த்து! கசை இடு = சவுக்கடி கொடுத்து.....
ஹோய்...முருகா...என்ன கொழுப்பு உனக்கு? எங்க மயிலாரைச் சவுக்கடி கொடுத்து ஓட்டறயா? ஹிஹி! சவுக்கால் அடிக்கலீங்க!
முருகன் சும்மா சொடுக்கறான்! சீன் போடுறான்! சொடுக்கும் போது உய்ய்ய்ய்ய்ஷ்-ன்னு ஒரு சத்தம் வரும்-ல? அது குதிரைக்கு ரொம்பவும் பிடிக்கும்! நமக்கும் தான்! :)

வாசி விசை கொண்ட வாகன = அப்படி குதிரையின் வேகம் கொண்ட மயில் வாகனம்!
பீலியின் கொத்து = அந்த மயில் தோகைகளின் கொத்து...
அசை படு, கால் பட்டு = அசைய அசைய, பறக்க பறக்க, அந்தக் காற்று பட்டு! கால்=காற்று! சிறுகால்=தென்றல்! பெருகால்=புயல்! தமிழில் அருமையான காரணப் பெயர்களில் இந்தக் கால்=காற்று என்பதும் ஒன்று!

பறக்கும் மயில்


மயில் நடக்கும் போதும், நடனமாடும் போதும் நல்லா இருக்கும்! ஒயிலா இருக்கும்! ஆனா பறக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருக்கும்! ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது! அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது! அதனால் தத்தித் தத்தித் தாவும்! அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும்! :)

அசைந்தது மேரு! = மயில் தோகைக் காற்று பட்டு, அசைந்தது மேரு மலை!
அடியிட, எண் திசை வரை தூள் பட்ட = மயில் குதிரைக் கால் பாய்ச்சல் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளில் உள்ள மலைகளிலும் புழுதி கிளம்ப...(வரை-ன்னா மலை)
அத் தூளின் வாரி, திடர் பட்டதே! = அந்தத் புழுதித் தூள் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது! நிலமானது!

வாரி-ன்னா கடல்! கிருபானந்த வாரி = கிருபை+ஆனந்த+வாரி = கருணை+களி+கடல்
இது புரியாம, வாரியை, லாரி-ன்னு ஆக்கி, வாரியார் சுவாமிகளைக் கேலி பேசுவார்கள், சில பகுத்தறிவுத் தமிழ்ப் புலவர்கள்! தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன்! :)

ஆக...மயில் பறக்கும் வேகக் காற்றில் மேரு மலையே அசைந்து கொடுக்க, எண்டிசைப் புழுதிகள் பறக்க, அது கடலாய் நின்ற அசுரத் தன்மையையே வற்றச் செய்தது!
மனதில் அந்த அசுரத்தன்மை வற்ற வற்ற, மனம் மேடானது! மேலானது!
மேடான மனம் நிலமானது! அதில் நாம் வாழ, அவனும் வந்து வாழ்வான்!

எப்படி இருந்துச்சி மயில் வாகன சேவை?
இந்தப் பாட்டு, மயிலின் ஆற்றலை விளக்கும் பாட்டு! மயில் விருத்தம்-ன்னு தனியாகவே பாடி இருக்காரு அருணகிரி!
சித்ரப் பதம் நடிக்கு மயிலாம்! ரத்ன கலாப மயிலே! ரத்ன கலாப மயிலே!-ன்னு சந்தமாப் பாடுவாரு, மயில் நடனத்தை!

நடன மயில் - நடக்கும் மயில்


பரத நாட்டிய - மயில் நடனத்துக்கு, அருணகிரியின் மயில் விருத்தம் அம்புட்டு சூப்பராப் பொருந்தும்! அவ்ளோ மயில் சந்தம்! அதை விட்டுட்டு, என்னென்னமோ பாஷை புரியாத மொழியில், இழுத்து இழுத்துப் பாடறாங்க மயில் நடனத்தை! மயில் நடனம்-ன்னா சும்மா தொம் தொம்-ன்னு அதிர வேண்டாமா?

சரி, உங்களுக்கு ஒரு வேலை!
மயிலுக்கு வேற என்னென்ன பேரெல்லாம் இருக்கு? தமிழ்-வடமொழி-ன்னு ரெண்டுமே சொல்லுங்க பார்ப்போம்!
மயில்களின் மலை விராலிமலை! அதைப் பற்றிய பதிவு இங்கே!




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

படைபட்ட, வேலவன் பால் வந்த, வாகை பதாகை என்னும்,
தடைபட்ட சேவல், சிறகு அடிக் கொள்ள, சலதி கிழிந்து,
உடைபட்டது அண்ட கடாகமும்! உதிர்ந்தது உடு படலம்! உதிர்ந்தது
இடைபட்ட குன்றமும்! மேரு வெற்பும் இடிபட்டவே!

மேலோட்டமான பொருள்:
வேல்படை உடைய முருகனிடம் வந்து சேர்ந்தது ஒரு வெற்றிக் கொடி! அது சேவற்கொடி! அது சிறகைச் சடசட என்று அடித்துக் கொள்ள, அந்த சத்தத்தில் கடல் கிழிந்தது!
அண்ட லோகங்களும் உடைபட்டன! நட்சத்திரக் கூட்டங்கள் உதிர்ந்தன! இடையே இருந்த குன்றும் மேருமலையும் பொடியாயின!

பிரிச்சி மேயலாமா?
படைபட்ட வேல்! அவன் பால் வந்த = படைகளில் சிறந்த வேலாயுதம்! அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு! அப்போ வந்த சேர வேண்டியவை இன்னும் இரண்டு!
ஒன்று மயில் = சென்ற பாட்டில்! இன்னொன்று சேவல் = இந்தப் பாட்டில்!

வாகை பதாகை என்னும் = வெற்றிக் கொடியாய் வந்து சேர்ந்தது! பதாகை=கொடி!
தடைபட்ட சேவல் = அது என்ன தடைபட்ட சேவல்? சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே! காலங்கார்த்தால கத்துமே! அப்புறம் என்ன தடை?

போர் செய்யும் எண்ணத்துடன் வந்தான் சூரன்! ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான்! அதான் தடைபட்ட சேவல்!
பேராசை, ஆணவம், கன்மம், மாயை எல்லாம் தடைபட்ட சேவல், உடைபட்ட சேவல், வேலிடம் நடைபட்ட சேவல்!

சிறகு அடிக் கொள்ள = அது சிறகைப் பரபர-ன்னு அடித்துச் சிலுப்பிக் கொள்கிறது! சேவல் சிலுப்பிக்கும் போது பார்த்தால் தெரியும்! கண்ணுல ஒரு கோவம் இருக்கும்! அந்தச் சிலுப்பும் வேகத்தில் நமக்கு லேசாப் பயமும் இருக்கும்! அந்தச் சமயம் வச்சிக்கக் கூடாது! விட்டுப் பிடித்து, பட்டியில் அடைக்கணும்!

சலதி கிழிந்து = சலதி-ன்னா கடல்! ஜலதி=சலதி?
கடலை இது போல நிறைய பேரால் சொல்லுவாரு அருணகிரி! என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்! திமிர ***, இன்னும் நிறைய இருக்கு!

உடைபட்டது அண்ட கடாகமும் = அண்டங்கள் பொடியாக
உதிர்ந்தது உடு படலம் = நட்சத்திரங்கள் வீழ
உதிர்ந்தது இடைபட்ட குன்றமும் = இடையில் உள்ள மலைகள் வீழ
மேரு வெற்பும் இடிபட்டவே = மேரு மலையும் ஒரு இடி பட்டதுவே!

மேரு மலை-ன்னா என்ன? இமய மலையா? கந்த வெற்பா? Imaginary Mountainஆ? :)
யாராச்சும் குறிப்பு கொடுங்க!

திருமுருகாற்றுப்படையில் முருகன் பறந்து வரும் காட்சியை நக்கீரர் காட்டுவது போலவே அருணகிரியும் காட்டுகிறார்!
அவர் யானை மேல் வருவதைக் காட்டுகிறார்! இவர் மயில் மேல் வருவதைக் காட்டுகிறார்!

இந்தப் பாடல் சேவலின் சிறப்பைச் சொல்கிறது! முந்தைய பாடல் மயிலின் சிறப்பைச் சொல்கிறது! சேவல்=நாதம்! மயில்=விந்து! நாத-விந்து கலாதீ நமோ நம!

இப்படிச் சேவலும், மயிலுமாய் இந்தப் பதிவு! முருகா!!

Tuesday, November 11, 2008

அலங்காரம்-11: "சும்மா" இரு! அம்-மா பொருள்!

கந்தரலங்காரம், ஒரு மாத சூறாவளி(அ)இடைவெளிக்குக்குப் பின் மீண்டும் தொடர்கிறது!:) "சும்மா" இருப்பது எப்படி? என்பது தான் அடுத்த பதிவு-ன்னு முருகனுக்குத் தெரியும் போல! அதனால் தான் என்னைய ஒரு மாசம் பூரா "சும்மா" இருக்க வச்சிட்டான்! வாங்க பார்க்கலாம்!:)

"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!
* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!
* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)
ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)





(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா
! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!


இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!
முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!

கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!

கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!
கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)

கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?
கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!
தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)
அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!

வல்லபமே = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!

சொல்லுகைக்கு இல்லை = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!
எல்லாம் இழந்து = யாவற்றையும் இழந்து
சும்மா இருக்கும் எல்லையுள் = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்
செல்ல எனை விட்டவா = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!

உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?


ஏதாச்சும் புரிஞ்சிச்சா?
ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :)

ஆனால் "சும்மா" இருக்கும் எல்லை-ங்கிறாரு! அங்க கொண்டு போய் முருகன் விட்டாரு-ன்னு வேற சொல்றாரு!
எல்லாம் இழந்து = ஒட்டு மொத்தமா இழந்து! - இழப்பதில் என்னாங்க பெருசா சாமார்த்தியம் வேண்டி இருக்கு? இந்த அருணகிரி ரொம்பவே "லொள்ளு" செய்கிறாரோ? ("லொள்ளு" என்ற சொல் ஒவ்வாதவர்கள், இந்த அருணகிரி "போக்கு" காட்டுகிறாரோ என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்!)

இன்னிக்கி பார்க்கப் போறது மிகவும் விசேடமான பாட்டு! மிகவும் அனுபவிச்சிப் படிக்கணும்! யோசிச்சிட்டுப் படிக்கணும்! படிச்சிட்டும் யோசிக்கணும்!
அதுனால இன்னிக்கி ரெண்டு பாட்டு கிடையாது! ஒரே பாட்டுக்குத் தான் பொருள் பாக்கப் போறோம்! சரியா?

மீண்டும் அதே கேள்வி! - "சும்மா இரு" என்றால் என்ன?
* எதுவும் பேசாமல் மெளன விரதம் இருப்பதா? சொல்+அற ன்னு வேற சொல்றாரு!
அதுவாத் தான் இருக்குமோ? ஆனா பின்னாடியே பாடும் பணியே பணியாய் அருள்வாய்-ன்னு வேற சொல்லிடறாரு! ஆக, அது கிடையாது!

* எந்த வேலையும் செய்யாம, அலட்டிக்காம, சும்மா இருப்பதா?
* கடமையைச் செய், பலனை எதிர் பார்! (பாராதே)-ன்னு சும்மா இருப்பதா?
* கடமையைச் செய்யும் போது, வருமா வருமா-ன்னு பலனை எதிர்பார்த்துக்கிட்டே செய்யாம, கடமையைச் சிதறாமல் செஞ்சி சும்மா இருப்பதா?

* யார் கூடவும் எதுவும் பேசாமல், யார் கூடவும் எதுவும் வச்சிக்காமல், சும்மா ஒதுங்கி இருப்பதா?
* சரி, யார் கூடவும் எதுவும் வச்சிக்கலை! ஆனால் தனியா இருந்தால் கூட மனம் எங்கெங்கோ போகுதே! என்ன செய்ய?
* பழைய காதலி வீட்டுக்குப் போயி வருது! நிலத் தகராற்றில் வெட்டிக் கொன்றவன் வீட்டுக்குப் போயி வருது! கடனை அடைக்காமல் நின்ற கோர்ட் வாசலுக்குப் போயி வருகிறது!

* பாவனா வீட்டுக்குப் போயி வருது! கள்ளப் படம் பார்க்கப் போயி வருது! :)
* ஈழத்துக்குப் போய் வருது! பின்னூட்டத்தில் சண்டை போட்டவர்கள் பதிவுக்கு எல்லாம் கூடப் போயி வருது! :)

* ஒரு வருசமா பேசாமல் கோபமாய் இருக்கும் என் உயிர் நண்பன் வீட்டுக்குப் போயி வருது!
* திருமலை மேல் ஏறி, தடுப்பார் யாருமில்லாமல் கருவறைக்குள் போயி வருது!
* இது நல்லது தானே! மனசால சாமியைப் பார்ப்பது நல்லது தானே! அதைக் கூடச் செய்யாமல் "சும்மா இரு"-ன்னா எப்படி இருக்குறதாம்? அடப் போங்கப்பா! :)

இப்போ சொல்லுங்க, சும்மா இருத்தல் என்றால் என்ன?

மெய்யாலுமே ஒருத்தர் சும்மா இருக்கத் தான் முடியுமா? கடவுளையாச்சும் நினைப்போம்-ல? சும்மா கிட! அது கூட வேணாம் என்றா சொல்லி இருப்பாரு அருணகிரி?
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கணும், இல்லையா?
அந்த வரியை இன்னொரு முறை நல்லாப் பாருங்க! = எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல, எனை விட்டவா!


ஆங்...இப்போ தாங்க கொஞ்சம் லேசுமாசாப் புரியிது!

நம்மாலேயும் சும்மா இருக்க முடியுமாம்! எப்படி? = எல்லாம் இழந்து! எல்லாம் இழந்தாச் சும்மா இருக்கலாமாம்!
ஆசையைப் பாருங்க! எதை எல்லாம் இழக்கச் சொல்றீங்க? = சிந்தனை, சொல், செயல்! (மனம், வாக்கு, காயம்)! அட இதெல்லாம் இழந்தா ஜடமா ஆயிட மாட்டோமா? என்னா பேச்சு பேசறீங்க நீங்க?

உம்ம்ம்ம்ம்.....அன்னிக்கி வீட்டுல செம ரகளை!
வேறு யாருக்கு? எனக்கும் தங்கச்சிக்கும் தான்! வாடீ, போடா-ன்னு எல்லாம் வாய் வார்த்தை முத்திப் போயி, கை கலப்பும் வந்தாச்சு! மனசுக்குள்ள வேற கறுவுகிறோம்...உன்னைய இன்னிக்கி ஒரு கை பாக்காம வுடறதில்லை! ஒரே ரணகளம்! :)

எங்கிருந்தோ அம்மா ஓடியாறாங்க! இந்தக் காட்சியைப் பாத்துட்டு திகைச்சிப் போயி நிக்குறாங்க! ஒன்னுமே சொல்ல முடியலை அவங்களால! இதுங்களுக்கு இப்போ எடுத்துச் சொன்னா ஒன்னும் மண்டையில் ஏறாது-ன்னு நல்லாத் தெரியுது! குரலை உசத்தி ஒரு கத்து கத்துறாங்க பாருங்க! அவிங்களுக்கு மூச்சு வாங்குது!
"யப்பாஆஆஆ...கொஞ்சம் "சும்மாஆஆஆஆ" இருக்க மாட்டீங்களா???"

அவ்வளவு தான்! ஒரே நிசப்தம்!
* பாவி! உனக்கு இருக்குடா பூசை என்று கறுவுதல் நின்னு போச்சு = மனம்!
* நீ தான்டீ காரணம் என்ற பதிலுக்குப் பதில் பேசுவது நின்னு போச்சு = வாக்கு!
* கை நீட்டி அடிச்சிப் பேசறதும் நின்னு போச்சு = காயம்(உடல்)!
இப்படி மனம்-வாக்கு-காயம், அத்தனையும் ஓர் நொடிக்குள் அடங்கிப் போச்சி! ஏன்? எப்படி?

ஏன்னா....அம்மா மேலே எங்க ரெண்டு பேருக்குமே பாசம்!
அவிங்க மூச்சு வாங்கி நிக்குறதைப் பாத்த அடுத்த விநாடி...

"எங்கள்" சொல், "எங்கள்" செயல், "எங்கள்" சிந்தனை, "எங்கள்" நியாயம், "எங்கள்" ஈகோ!
= எல்லாம் அற, எங்களை இழந்த நலம்! எங்களை "இழ"ந்தாச்சு! "சும்மா" இருந்தாச்சு!

பேச்சு வளரவே இல்லை! உம்ம்ம்ம்ம்-ன்னு ஒரே நிசப்தம் தான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "அம்மா பசிக்குதும்மா, சாப்பாடு போடுங்க!" :)



கந்தர் அநுபூதி:
* எல்லாம் அற, என்னை "இழந்த" நலம்! சொல்லாய் முருகா! - 2nd செய்யுள்!
* "சும்மா இரு", சொல்லற, என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - 12th செய்யுள்!
கந்தர் அலங்காரம்:
* "எல்லாம் இழந்து + சும்மா இருக்கும்", எல்லையுள் செல்ல, எனை விட்டவா!

அநுபூதியில் தனித்தனியாகச் சொன்ன தத்துவத்தை,
இங்கு அலங்காரம் என்பதால் கோர்த்து விடுகிறார் பாருங்கள் அருணகிரி!
இணைத்துப் பார்த்தால் இனிமை புரியும்!
அது துற-அறமோ, இல்-அறமோ, இணைப்பே இனிப்பு! :)

எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!
எல்லாம் அற = சர்வ தர்வமான் பரித்யஜ்ய
என்னை இழந்த நலம் = (என்னை இழந்து, அவனையே) மாம் ஏகம் சரணம் வ்ரஜ!
சரணம் என்பதே நலம்! நம்மை அவனுக்கு இழந்த நலம்! நம் இழப்பு என்பது, நமக்கே நலம் ஆகி விடுவது, இங்கு மட்டுமே!

சும்மா இரு! "அம்மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே!
சும்மா இரு! சொல் அற (பேசாதே)!-ன்னு முருகன் சொல்லிட்டுப் போயிட்டான்! அம்மாடி! பொருள் ஒன்றும் அறியலையே! - அப்படியா பாடுகிறார் நம் அருணகிரி? இல்லை! இல்லை! இப்போ பாருங்க...

சும்மா இரு! "அம்- மாபொருள்" ஒன்றும் அறிந்திலனே!
"சும்மா இருத்தல்" என்பது மா பொருள்! பெரும் பொருள்! ஞான ரகஸ்யம்!
நிர்விகல்ப சமாதி நிலை-ன்னு கூடச் சொல்லுவாங்க!

அதெல்லாம் போயும் போயும் எனக்கு வருமா? நானோ (அருணகிரி) புலனடக்கம் கற்காதவன்! ஞான-கர்ம-பக்திகள் எதுவும் உளமாரத் தெரியாது! ஆனால் தெரிந்தது போல் பேசுவேன்! ஏதோ முருக-அன்பு கொஞ்சமா நெஞ்சில் மிதக்கிறது! அவ்வளவு தான்!

அம் மாபொருள் எல்லாம் அடியேனுக்குத் தெரியாது! ஆனாலும் முருகனருளால் "சும்மா" இருந்தேனே!
அம்- மாபொருள் ஒன்றும் அறிந்திலனே! என்றாலும் "சும்மா" இருக்க முடிந்ததே! எப்படி?



சும்மா இருக்க மாட்டீங்களா? என்று அப்போது அம்மா கத்தினார்கள்!
அம்மா கத்தும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து, "சும்மா" இருந்தோமே!
சும்மா இரு! சொல்லற! என்று இப்போது இறைவன் கழறுகிறான்!
அவன் கழறும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து "சும்மா" இருக்க முடியாதா?

முடியாது! முடியாது! முடியாது!
நம் வேண்டுதல்களை எல்லாம் நடத்திக் கொடுக்கவே அவன்!
நமக்கு மோட்சம் கொடுக்கவே அவன்!
என்று "நம்"மை முன்னே தள்ளி, அவனைப் பின்னே தள்ளினால்? = முடியாது!

முடியும்! முடியும்! முடியும்!
அவன் முக உல்லாசத்துக்கு நாம்!
அவன் திருவுள்ள உகப்புக்கு நாம்!
என்று அவனை முன்னே தள்ளி, "நம்"மைப் பின்னே தள்ளினால்? = முடியும்!

* ஒரு பிறவிக்கான அம்மாவை முன்னுக்குத் தள்ளினோம்! "சும்மா" இருக்க முடிந்தது!
* ஒவ்வொரு பிறவிக்குமான அம்மாவை முன்னுக்குத் தள்ளினால், "சும்மா" இருக்க முடியும்!

யோகிகளாலும், ஞானிகளாலும் மட்டும் தான் "சும்மா" இருக்க முடியும் என்பதில்லை! அன்றாடங் காய்ச்சிகளான நம்மால் கூடச் "சும்மா" இருக்க முடியும்!
நல்ல விஷயங்கள் நடக்க, குடும்ப நற் காரியங்கள் நடக்க, பொது நன்மை நடக்க, அன்மீக மறுமலர்ச்சி நடக்க, மக்கள் தொண்டு நடக்க.....

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்!


மனதில் இந்த அன்பு தங்கினால்,
வாக்குச் சண்டை/உடல் சண்டை/மனச் சண்டை போட மாட்டோம்!
இப்படி மனம்-வாக்கு-காயம் எல்லாம் இழந்து, நம்மைக் கொஞ்சம் பின்னே தள்ளினால்?

என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!
சரண கதி = இதுவே அம்-மா பொருள்! "சும்மா" பொருள்!


சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!


பின் குறிப்பு:
"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!
விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!

ஆனால், இதை உபன்னியாசமாகப் பேசி விட்டு, அப்புறம் ஒரு பத்தடி தள்ளியே வைத்து விடுகிறோம்! "சமாதி நிலை"ன்னு பேரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது! ஒதுங்கிக் கொள்கிறோம்!

அதனால் தான் விளக்கத்தை மரபு வழியில் இருந்து சற்றே மாற்றி அமைத்தேன்! வீட்டுச் சண்டையில் "சும்மா" போவதை எடுத்துக்காட்டாக வைத்தேன்!
இதில் பிழையேதும் இருந்தால், சாதனா-சாதன கர்ம நிஷ்டர்களும், சித்த புருஷர்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!
நம் வலையுலக ஆன்மீகப் பெரியவர்களும் அடியேன் கருத்தினைப் பொறுத்தருள வேண்டுகிறேன்!

"சும்மா இரு" என்பது ஞானிகளுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான்! என்பதைப் புரிந்து கொள்வதே அடியேன் நோக்கம்!
அம்மா, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! முருகா! முருகா!!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP