Tuesday, November 11, 2008

அலங்காரம்-11: "சும்மா" இரு! அம்-மா பொருள்!

கந்தரலங்காரம், ஒரு மாத சூறாவளி(அ)இடைவெளிக்குக்குப் பின் மீண்டும் தொடர்கிறது!:) "சும்மா" இருப்பது எப்படி? என்பது தான் அடுத்த பதிவு-ன்னு முருகனுக்குத் தெரியும் போல! அதனால் தான் என்னைய ஒரு மாசம் பூரா "சும்மா" இருக்க வச்சிட்டான்! வாங்க பார்க்கலாம்!:)

"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!
* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!
* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)
ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)





(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா
! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!


இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!
முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!

கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!

கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!
கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)

கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?
கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!
தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)
அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!

வல்லபமே = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!

சொல்லுகைக்கு இல்லை = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!
எல்லாம் இழந்து = யாவற்றையும் இழந்து
சும்மா இருக்கும் எல்லையுள் = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்
செல்ல எனை விட்டவா = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!

உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?


ஏதாச்சும் புரிஞ்சிச்சா?
ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :)

ஆனால் "சும்மா" இருக்கும் எல்லை-ங்கிறாரு! அங்க கொண்டு போய் முருகன் விட்டாரு-ன்னு வேற சொல்றாரு!
எல்லாம் இழந்து = ஒட்டு மொத்தமா இழந்து! - இழப்பதில் என்னாங்க பெருசா சாமார்த்தியம் வேண்டி இருக்கு? இந்த அருணகிரி ரொம்பவே "லொள்ளு" செய்கிறாரோ? ("லொள்ளு" என்ற சொல் ஒவ்வாதவர்கள், இந்த அருணகிரி "போக்கு" காட்டுகிறாரோ என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்!)

இன்னிக்கி பார்க்கப் போறது மிகவும் விசேடமான பாட்டு! மிகவும் அனுபவிச்சிப் படிக்கணும்! யோசிச்சிட்டுப் படிக்கணும்! படிச்சிட்டும் யோசிக்கணும்!
அதுனால இன்னிக்கி ரெண்டு பாட்டு கிடையாது! ஒரே பாட்டுக்குத் தான் பொருள் பாக்கப் போறோம்! சரியா?

மீண்டும் அதே கேள்வி! - "சும்மா இரு" என்றால் என்ன?
* எதுவும் பேசாமல் மெளன விரதம் இருப்பதா? சொல்+அற ன்னு வேற சொல்றாரு!
அதுவாத் தான் இருக்குமோ? ஆனா பின்னாடியே பாடும் பணியே பணியாய் அருள்வாய்-ன்னு வேற சொல்லிடறாரு! ஆக, அது கிடையாது!

* எந்த வேலையும் செய்யாம, அலட்டிக்காம, சும்மா இருப்பதா?
* கடமையைச் செய், பலனை எதிர் பார்! (பாராதே)-ன்னு சும்மா இருப்பதா?
* கடமையைச் செய்யும் போது, வருமா வருமா-ன்னு பலனை எதிர்பார்த்துக்கிட்டே செய்யாம, கடமையைச் சிதறாமல் செஞ்சி சும்மா இருப்பதா?

* யார் கூடவும் எதுவும் பேசாமல், யார் கூடவும் எதுவும் வச்சிக்காமல், சும்மா ஒதுங்கி இருப்பதா?
* சரி, யார் கூடவும் எதுவும் வச்சிக்கலை! ஆனால் தனியா இருந்தால் கூட மனம் எங்கெங்கோ போகுதே! என்ன செய்ய?
* பழைய காதலி வீட்டுக்குப் போயி வருது! நிலத் தகராற்றில் வெட்டிக் கொன்றவன் வீட்டுக்குப் போயி வருது! கடனை அடைக்காமல் நின்ற கோர்ட் வாசலுக்குப் போயி வருகிறது!

* பாவனா வீட்டுக்குப் போயி வருது! கள்ளப் படம் பார்க்கப் போயி வருது! :)
* ஈழத்துக்குப் போய் வருது! பின்னூட்டத்தில் சண்டை போட்டவர்கள் பதிவுக்கு எல்லாம் கூடப் போயி வருது! :)

* ஒரு வருசமா பேசாமல் கோபமாய் இருக்கும் என் உயிர் நண்பன் வீட்டுக்குப் போயி வருது!
* திருமலை மேல் ஏறி, தடுப்பார் யாருமில்லாமல் கருவறைக்குள் போயி வருது!
* இது நல்லது தானே! மனசால சாமியைப் பார்ப்பது நல்லது தானே! அதைக் கூடச் செய்யாமல் "சும்மா இரு"-ன்னா எப்படி இருக்குறதாம்? அடப் போங்கப்பா! :)

இப்போ சொல்லுங்க, சும்மா இருத்தல் என்றால் என்ன?

மெய்யாலுமே ஒருத்தர் சும்மா இருக்கத் தான் முடியுமா? கடவுளையாச்சும் நினைப்போம்-ல? சும்மா கிட! அது கூட வேணாம் என்றா சொல்லி இருப்பாரு அருணகிரி?
அப்படின்னா இதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கணும், இல்லையா?
அந்த வரியை இன்னொரு முறை நல்லாப் பாருங்க! = எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல, எனை விட்டவா!


ஆங்...இப்போ தாங்க கொஞ்சம் லேசுமாசாப் புரியிது!

நம்மாலேயும் சும்மா இருக்க முடியுமாம்! எப்படி? = எல்லாம் இழந்து! எல்லாம் இழந்தாச் சும்மா இருக்கலாமாம்!
ஆசையைப் பாருங்க! எதை எல்லாம் இழக்கச் சொல்றீங்க? = சிந்தனை, சொல், செயல்! (மனம், வாக்கு, காயம்)! அட இதெல்லாம் இழந்தா ஜடமா ஆயிட மாட்டோமா? என்னா பேச்சு பேசறீங்க நீங்க?

உம்ம்ம்ம்ம்.....அன்னிக்கி வீட்டுல செம ரகளை!
வேறு யாருக்கு? எனக்கும் தங்கச்சிக்கும் தான்! வாடீ, போடா-ன்னு எல்லாம் வாய் வார்த்தை முத்திப் போயி, கை கலப்பும் வந்தாச்சு! மனசுக்குள்ள வேற கறுவுகிறோம்...உன்னைய இன்னிக்கி ஒரு கை பாக்காம வுடறதில்லை! ஒரே ரணகளம்! :)

எங்கிருந்தோ அம்மா ஓடியாறாங்க! இந்தக் காட்சியைப் பாத்துட்டு திகைச்சிப் போயி நிக்குறாங்க! ஒன்னுமே சொல்ல முடியலை அவங்களால! இதுங்களுக்கு இப்போ எடுத்துச் சொன்னா ஒன்னும் மண்டையில் ஏறாது-ன்னு நல்லாத் தெரியுது! குரலை உசத்தி ஒரு கத்து கத்துறாங்க பாருங்க! அவிங்களுக்கு மூச்சு வாங்குது!
"யப்பாஆஆஆ...கொஞ்சம் "சும்மாஆஆஆஆ" இருக்க மாட்டீங்களா???"

அவ்வளவு தான்! ஒரே நிசப்தம்!
* பாவி! உனக்கு இருக்குடா பூசை என்று கறுவுதல் நின்னு போச்சு = மனம்!
* நீ தான்டீ காரணம் என்ற பதிலுக்குப் பதில் பேசுவது நின்னு போச்சு = வாக்கு!
* கை நீட்டி அடிச்சிப் பேசறதும் நின்னு போச்சு = காயம்(உடல்)!
இப்படி மனம்-வாக்கு-காயம், அத்தனையும் ஓர் நொடிக்குள் அடங்கிப் போச்சி! ஏன்? எப்படி?

ஏன்னா....அம்மா மேலே எங்க ரெண்டு பேருக்குமே பாசம்!
அவிங்க மூச்சு வாங்கி நிக்குறதைப் பாத்த அடுத்த விநாடி...

"எங்கள்" சொல், "எங்கள்" செயல், "எங்கள்" சிந்தனை, "எங்கள்" நியாயம், "எங்கள்" ஈகோ!
= எல்லாம் அற, எங்களை இழந்த நலம்! எங்களை "இழ"ந்தாச்சு! "சும்மா" இருந்தாச்சு!

பேச்சு வளரவே இல்லை! உம்ம்ம்ம்ம்-ன்னு ஒரே நிசப்தம் தான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "அம்மா பசிக்குதும்மா, சாப்பாடு போடுங்க!" :)



கந்தர் அநுபூதி:
* எல்லாம் அற, என்னை "இழந்த" நலம்! சொல்லாய் முருகா! - 2nd செய்யுள்!
* "சும்மா இரு", சொல்லற, என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - 12th செய்யுள்!
கந்தர் அலங்காரம்:
* "எல்லாம் இழந்து + சும்மா இருக்கும்", எல்லையுள் செல்ல, எனை விட்டவா!

அநுபூதியில் தனித்தனியாகச் சொன்ன தத்துவத்தை,
இங்கு அலங்காரம் என்பதால் கோர்த்து விடுகிறார் பாருங்கள் அருணகிரி!
இணைத்துப் பார்த்தால் இனிமை புரியும்!
அது துற-அறமோ, இல்-அறமோ, இணைப்பே இனிப்பு! :)

எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!
எல்லாம் அற = சர்வ தர்வமான் பரித்யஜ்ய
என்னை இழந்த நலம் = (என்னை இழந்து, அவனையே) மாம் ஏகம் சரணம் வ்ரஜ!
சரணம் என்பதே நலம்! நம்மை அவனுக்கு இழந்த நலம்! நம் இழப்பு என்பது, நமக்கே நலம் ஆகி விடுவது, இங்கு மட்டுமே!

சும்மா இரு! "அம்மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே!
சும்மா இரு! சொல் அற (பேசாதே)!-ன்னு முருகன் சொல்லிட்டுப் போயிட்டான்! அம்மாடி! பொருள் ஒன்றும் அறியலையே! - அப்படியா பாடுகிறார் நம் அருணகிரி? இல்லை! இல்லை! இப்போ பாருங்க...

சும்மா இரு! "அம்- மாபொருள்" ஒன்றும் அறிந்திலனே!
"சும்மா இருத்தல்" என்பது மா பொருள்! பெரும் பொருள்! ஞான ரகஸ்யம்!
நிர்விகல்ப சமாதி நிலை-ன்னு கூடச் சொல்லுவாங்க!

அதெல்லாம் போயும் போயும் எனக்கு வருமா? நானோ (அருணகிரி) புலனடக்கம் கற்காதவன்! ஞான-கர்ம-பக்திகள் எதுவும் உளமாரத் தெரியாது! ஆனால் தெரிந்தது போல் பேசுவேன்! ஏதோ முருக-அன்பு கொஞ்சமா நெஞ்சில் மிதக்கிறது! அவ்வளவு தான்!

அம் மாபொருள் எல்லாம் அடியேனுக்குத் தெரியாது! ஆனாலும் முருகனருளால் "சும்மா" இருந்தேனே!
அம்- மாபொருள் ஒன்றும் அறிந்திலனே! என்றாலும் "சும்மா" இருக்க முடிந்ததே! எப்படி?



சும்மா இருக்க மாட்டீங்களா? என்று அப்போது அம்மா கத்தினார்கள்!
அம்மா கத்தும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து, "சும்மா" இருந்தோமே!
சும்மா இரு! சொல்லற! என்று இப்போது இறைவன் கழறுகிறான்!
அவன் கழறும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து "சும்மா" இருக்க முடியாதா?

முடியாது! முடியாது! முடியாது!
நம் வேண்டுதல்களை எல்லாம் நடத்திக் கொடுக்கவே அவன்!
நமக்கு மோட்சம் கொடுக்கவே அவன்!
என்று "நம்"மை முன்னே தள்ளி, அவனைப் பின்னே தள்ளினால்? = முடியாது!

முடியும்! முடியும்! முடியும்!
அவன் முக உல்லாசத்துக்கு நாம்!
அவன் திருவுள்ள உகப்புக்கு நாம்!
என்று அவனை முன்னே தள்ளி, "நம்"மைப் பின்னே தள்ளினால்? = முடியும்!

* ஒரு பிறவிக்கான அம்மாவை முன்னுக்குத் தள்ளினோம்! "சும்மா" இருக்க முடிந்தது!
* ஒவ்வொரு பிறவிக்குமான அம்மாவை முன்னுக்குத் தள்ளினால், "சும்மா" இருக்க முடியும்!

யோகிகளாலும், ஞானிகளாலும் மட்டும் தான் "சும்மா" இருக்க முடியும் என்பதில்லை! அன்றாடங் காய்ச்சிகளான நம்மால் கூடச் "சும்மா" இருக்க முடியும்!
நல்ல விஷயங்கள் நடக்க, குடும்ப நற் காரியங்கள் நடக்க, பொது நன்மை நடக்க, அன்மீக மறுமலர்ச்சி நடக்க, மக்கள் தொண்டு நடக்க.....

நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்!


மனதில் இந்த அன்பு தங்கினால்,
வாக்குச் சண்டை/உடல் சண்டை/மனச் சண்டை போட மாட்டோம்!
இப்படி மனம்-வாக்கு-காயம் எல்லாம் இழந்து, நம்மைக் கொஞ்சம் பின்னே தள்ளினால்?

என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!
சரண கதி = இதுவே அம்-மா பொருள்! "சும்மா" பொருள்!


சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!


பின் குறிப்பு:
"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!
விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!

ஆனால், இதை உபன்னியாசமாகப் பேசி விட்டு, அப்புறம் ஒரு பத்தடி தள்ளியே வைத்து விடுகிறோம்! "சமாதி நிலை"ன்னு பேரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது! ஒதுங்கிக் கொள்கிறோம்!

அதனால் தான் விளக்கத்தை மரபு வழியில் இருந்து சற்றே மாற்றி அமைத்தேன்! வீட்டுச் சண்டையில் "சும்மா" போவதை எடுத்துக்காட்டாக வைத்தேன்!
இதில் பிழையேதும் இருந்தால், சாதனா-சாதன கர்ம நிஷ்டர்களும், சித்த புருஷர்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!
நம் வலையுலக ஆன்மீகப் பெரியவர்களும் அடியேன் கருத்தினைப் பொறுத்தருள வேண்டுகிறேன்!

"சும்மா இரு" என்பது ஞானிகளுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான்! என்பதைப் புரிந்து கொள்வதே அடியேன் நோக்கம்!
அம்மா, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! முருகா! முருகா!!

43 comments:

VSK said...

வழக்கம் போலவே கலக்கலான விளக்கவுரை, அவரவர் அறிந்த அறியும் முறையில்!

முருகனருள் முன்னிற்கும்!

கோவி.கண்ணன் said...

"சும்மா இரு " - "அற்று / எதுவும் அற்று இரு" என்ற பொருளில் வராதா ?

jeevagv said...

நல்லா வந்திருக்கு கே.ஆர்.எஸ்!
போன பகுதியில் என்ன உபதேசம் என்ற கேள்விக்கு, இப்போ விடை சொல்லியாச்சு போல இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட,
நண்பர்கள் இருவரும் சேர்ந்து வந்திருக்காங்க!
SK, சிங்கைக்குப் போயிருக்கீங்களா என்ன? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
வழக்கம் போலவே கலக்கலான விளக்கவுரை, அவரவர் அறிந்த அறியும் முறையில்!//

நன்றி SK ஐயா!
அவரவர் தமதம அறிவறி வகைவகை அல்லவா? :)

//முருகனருள் முன்னிற்கும்!//

உங்கள் அருளும் முன் நிற்கும்!
உங்க பின்னூட்டம் தான் முன் நின்றதே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
"சும்மா இரு " - "அற்று / எதுவும் அற்று இரு" என்ற பொருளில் வராதா ?//

வாங்க-ண்ணா!
1. எதுவும் அற்று இரு என்றால் என்ன?
2. அப்படி இருக்க இயற்கையாக இயலுமா?
3. அப்படியே இருந்தாலும், தொடர்ந்து அப்படி இருக்க முடியுமா?
4. எது வரை அப்படி "அற்று" இருக்க வேண்டும்?

கோவி.கண்ணன் said...

//வாங்க-ண்ணா!
1. எதுவும் அற்று இரு என்றால் என்ன?
2. அப்படி இருக்க இயற்கையாக இயலுமா?
3. அப்படியே இருந்தாலும், தொடர்ந்து அப்படி இருக்க முடியுமா?
4. எது வரை அப்படி "அற்று" இருக்க வேண்டும்?//

பற்றெதுவும் அற்று இருந்தாலே மற்றெது(வு)ம் அற்றுவிடும் !

சரியா ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எதுவும் அற்று இரு//

அறிவியல் வழியில் பாருங்க!
எதுவும் அற்று ஒரு பொருள் இருக்க முடியுமா?
Every object has its own state! - அப்படின்னு இருக்கே!

பற்று அற்று இரு ஓக்கே! எதுவும் அற்று என்னும் போது பக்தியும் அற்று இருக்க வேண்டுமா?

SK, ஜீவா
கொஞ்சம் விளக்குங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருமூலரின் திருமந்திரம் அல்லது நம்மாழ்வாரின் திருவாய்மொழி தெரிஞ்சவங்க கோவியின் கேள்விக்கு விளக்கம் சொல்லி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

எதுவும் இல்லாத நிலை தான் சும்மா இருத்தலா?

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
இதை வச்சி விளக்கலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
நல்லா வந்திருக்கு கே.ஆர்.எஸ்!//

நன்றி ஜீவா!
மேலே நீங்க வந்து, "சும்மா-வை", சும்மா பிரிச்சி மேயுங்களேன்!

//போன பகுதியில் என்ன உபதேசம் என்ற கேள்விக்கு, இப்போ விடை சொல்லியாச்சு போல இருக்கு!//

:)
ஆமாம்!
இந்த அலங்காரச் செய்யுள் இரண்டும் ஜோடிச் செய்யுள்! கேள்வி ஒன்றில், பதில் ஒன்றில்!

அதான் சென்ற பதிவில், அருணகிரியாருக்கு என்ன உபதேசம் ஆனது-ன்னு அதைக் கேள்வியா வச்சேன்!
பதில் பின்னால தொக்கி நிற்குது-ன்னும் சொன்னேன்!

அந்தப் பதிவில் அதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் "சும்மா" இருந்திருந்தால்? :))))

கோவி.கண்ணன் said...

//எதுவும் இல்லாத நிலை தான் சும்மா இருத்தலா?//

இதெல்லாம் சந்யாசிகள் சொல்வது, விகர்மம் அதாவது கர்ம மற்ற நிலை என்றெல்லாம் சொல்லுவார்கள். அப்படிச் சொல்லும் சந்யாசிகள் கூட தங்கள் உழைப்பில் கிடைக்கும் உணவை உண்ணுவதில்லை. பிறருடைய உழைப்புதான் அவர்களுக்கு உணவாகும், பிறகு எப்படி தன்னை கர்மா அற்றவர் என்று சொல்ல முடியும்.

பற்றற்று இருத்தல் - அனைவர் மீதும் ஒன்று போலவே அன்பு செலுத்துவது ஆகும். இவர்கள் நெருக்கமானவர்கள் கூடுதல் அன்பு, நெருக்கம் குறைந்தவர்க்கள் குறைவான அன்பு என்று இருந்தால் அங்கு பற்று இருக்கும். அனைவரின் பால் ஒரே மாதிரியான அன்பு பற்றற்ற நிலை என்பதாக புரிகிறது. இறைவன் பற்றறவன் என்று சொல்கிறோம். அப்படி என்றால் இறைவன் அன்பில்லாதவன் என்று பொருளா ?

பற்றற்ற நிலை என்றால் எதுவும் அற்ற நிலை என்று நான் சொல்ல மாட்டேன். செய்யும் செயல்களில் ஆதாயம் தேடாமல் இருப்பதே 'பற்றற்ற' என்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா
இப்ப நீங்க அடி வாங்கப் போறீங்க! :)
முருகனருள் சஷ்டிப் பதிவில் பண்ணா மாதிரியே தாவினா எப்படி?
ஒங்களால "சும்மாவே" இருக்க முடியாதா? :)

//பற்றற்ற நிலை என்றால் எதுவும் அற்ற நிலை என்று நான் சொல்ல மாட்டேன்//

சும்மா இருக்கும் நிலை பற்றித் தானே பேச்சு?
சும்மா இருத்தல்=எதுவும் அற்று இருத்தல்-ன்னு நீங்க தானே சொன்னீங்க?

இப்போ திடீர்-ன்னு பற்று அற்று இருத்தல்-ன்னா எப்படி?
பற்று அற்று-ன்னா பற்று மட்டுமே அற்று! அன்பு இருக்கும்! பற்றற்றான் பற்றினை! நீங்களே சொல்லிட்டீங்க!

பற்று அற்று இருத்தல் ஒரு பரிமாணம்!
"எதுவும்" அற்று இருத்தல் இன்னொரு பரிமாணம்!

நாம இங்கே பேசுவது சும்மா இருத்தல்! "எதுவும்" அற்று இருத்தல்!

கோவி.கண்ணன் said...

//ஒங்களால "சும்மாவே" இருக்க முடியாதா? :)//

சத்தியமாக இனி அப்படி இருக்கிறேன். யாருக்கும் பிடிக்க வில்லை என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது. பெர்முடா முக்கோணம் என்று இன்னொரு கதை எழுதும் சிரமத்தை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை.

மாதவிப் பந்தலுக்கு வருவேன் !

Kavinaya said...

அருமையான விளக்கம் / உதாரணம் கண்ணா. இந்தப் பதிவைப் படிக்கும்போது கபீரன்பன் அவர்கள் எழுதிய பழையதைத் தின்று சும்மா கிட என்ற பதிவு நினைவு வந்தது. ஒருவனுடைய ஆன்மீக நிலை உயர உயர, அவன் செய்ய வேண்டிய செயல்கள் குறைந்து கொண்டே வரும் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். அதைத்தான் அருணகிரியாரும் சொல்கிறார் போலும்.

வர்ணனையும் (இந்தளப் பெண், மால்வரை தோள் அண்ணல்) ரொம்பவே நல்லாருந்துச்சு :)

S.Muruganandam said...

//எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!//

அருமை, அருமை.

இன்று அன்னாபிஷேக தரிசனம் பெறுங்கள் http://natarajar.blogspot.com/2008/11/blog-post.html

ஷைலஜா said...

சும்மா இரு பதிவைப்படித்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை!

அக்குவேறு ஆணிவேறா பிரமாதமா எழுதினத எல்லாம் படிச்சேன்...அலங்காரத்துக்கு இங்கெ நான் அடிக்கடிவரலேன்னாலும் அதுபிடிச்சவிஷயம் தான், அலங்கரிப்பது அழகுபடுத்துவதுதானே?!
//
"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!
விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!
//
சும்மா இருக்கமுடியாமல் தெய்வத்தின் துணையை நாடிய தாயுமானவர் பாட்டு இது........
"சொல்லால் மூழ்கிலோ சுகம் இல்லை
மௌனியாய்ச்சும்மா இருக்க அருளாய்
சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரம் ஜோதியே சுகவாரியே!"

சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பது நம்மால் ஆகிறகாரியமா என்ன?

சும்மா என்ற சொல்லில் அப்படி என்ன விசேஷம்?
அஹம்காரம்
இதை வேறுபொருளில்கொள்ளக்கூடாது அவ்வாறல்ல...'நான் 'எனும் தனமைதான் அஹங்காரம்.

இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில்
பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

'புத்தி'என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது கெட்டது நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள் தீர்மானங்கள் தர்க்கங்கள் நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும்.

நாம் அறிவு பூர்வமாகச்செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும். சில சமயம் உணர்ச்சி பூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும்.
ஆனால் புத்திக்கு கட்டுப்படுத்திக்கொள்ளும் திறனும் உண்டு.

உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் நடந்தவண்ணமே உள்ளன.
ஒன்று நினைப்பு மற்றது மறப்பு

மறப்பு என்பது இறைவன் நமக்குக்கொடுத்தவரப்ரசாதம்தான்.

'சொல் அற சும்மா இரு' எனும் முருகனின் உபதேசம் அந்த மாபெரும் பொருளை அறியமுடியவில்லை என்று அருணகிரி கூறுகிறார். எண்ணங்களை அற்றுப்போகச்செய்ய வேண்டுமானால் முதலில் கைவரியை அடக்கி மத்யமாவை அடக்கி பஸ்யந்தியையும் அடக்கி முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.
அதே நேரத்தில் மனஸ் எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கிவிடும். ஏனெனில் எண்ணங்கள் எதுவும் அங்கு நிலவாது. புத்தி சித்தம் அஹம்காரம் ஆகிய மற்றவையும் இல்லாமல் போய்விடும் மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில் உணர்வுகள் இருக்கமாட்டா. பதிப்பிக்கப்படவும் மாட்டாது.
இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.

நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?

இதைத்தான் சும்மா இருத்தல் என்பார்கள்.

சும்மா இருக்கும்தன்மைஎப்படீஇருக்கும் என்பதைச்சொல்லமுடியாது.

கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
நினைப்பும் இல்லை
இரவும் இல்லை பகலும் இல்லை

அது ஒரு TWILIGHT ZONE!


*******************************************


அடேயப்பா சும்மா பற்றி சும்மா ஒருநாள் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசும்பொது கேட்டு எடுத்துக்கொண்ட குறிப்புகளை சும்மா அப்படியே டைரில எழுதிவச்சதை சும்மா இப்போ நேரம்கிடைச்சிதேன்னு இங்க ஆன்மீகசூப்பர்ஸ்டார் பதிவில் பின்ன்னூட்டமென இட்டுவிட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
//ஒங்களால "சும்மாவே" இருக்க முடியாதா? :)//

சத்தியமாக இனி அப்படி இருக்கிறேன்!
யாருக்கும் பிடிக்க வில்லை என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது//

ஹா ஹா ஹா!
அய்யோ, அய்யோ!
யாரு சொன்னா அப்பிடி? தாவாதீங்க-ன்னு தான் சொன்னேன்!

சரி இப்போ, நீங்களே பதில் சொல்லுங்க!
* பற்று அற்று இருத்தல்-ன்னா என்ன?
* "எதுவும்" அற்று இருத்தல்-ன்னா என்ன?

//மாதவிப் பந்தலுக்கு வருவேன் !//

வரலீன்னா வந்து அடிப்பேன், மாயனின் புல்லாங்குழலாலே! :)

Raghav said...

அண்ணே.. ஒரு தடவை படிச்சேன்.. ஆனாலும் என் மரமண்டைல ஏற மாட்டேங்குது.. நல்லா படிச்சுட்டு, புரிஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.. இது வருகைப் பதிவு மட்டுமே. :)

Raghav said...

//இகல்-ன்னு வரும் குறள் என்ன?//

எனக்கு ஞாபகம் உள்ள குறல் இதுதான்.. முதல்வன் படத்துல ரகுவரன் சொல்வாரே.. :)

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்தொழுகு வார்

Raghav said...

//தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :) //

அதே அதே.. நான் நிறைய தடவை இப்புடி யோசிச்சு பாத்துருக்கேன்.. அத விட பெரிய காமெடி, சின்னக் பையனா இருக்கும் போது.. மத்த பையங்ககிட்ட.. தேவர்கள் எல்லாம் பாற்கடல்ல இருந்து வெள்ளி டம்ளர்ல பால் எடுத்து குடிப்பாங்கன்னு சொல்வேன்..

Raghav said...

//ஏதாச்சும் புரிஞ்சிச்சா?
ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :) //

இதுவரை எந்த குழப்பமும் இல்லை..

Raghav said...

//நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்! //

ரவி அண்ணா விளக்கங்கள் அருமை.. முதலில் நான் தான் குழப்பிக் கொண்டேன்.. சும்மா இருப்பது மட்டும் கஷ்டமன்று.. சும்மா இர்த்தல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதும் கஷ்டம் தான்னு நினைச்சுட்டேன்..

Raghav said...

சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
அருமையான விளக்கம் / உதாரணம் கண்ணா//

நன்றி-க்கா

//இந்தப் பதிவைப் படிக்கும்போது கபீரன்பன் அவர்கள் எழுதிய பழையதைத் தின்று சும்மா கிட என்ற பதிவு நினைவு வந்தது//

கபீரன்பன் தத்துவ மார்க்கத்தை நுட்பமா எடுத்துக் காட்டியிருந்தாரு-க்கா!

//ஒருவனுடைய ஆன்மீக நிலை உயர உயர, அவன் செய்ய வேண்டிய செயல்கள் குறைந்து கொண்டே வரும் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். அதைத்தான் அருணகிரியாரும் சொல்கிறார் போலும்//

கர்மானுஷ்டானங்கள் குறையும்-ன்னு தப்பா பொருள் எடுத்துக்கிட்டு கோபிச்சிக்கப் போறாங்க! :)
உயர உயர, மலையின் கீழ் பொருட்கள் எல்லாம் சிறுசா தெரிவது இயற்கை தானேக்கா?

//வர்ணனையும் (இந்தளப் பெண், மால்வரை தோள் அண்ணல்) ரொம்பவே நல்லாருந்துச்சு :)//

இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)

///


ராகவ்!!! கவனிச்சியா உங்க அண்ணாத்த என்ன சொல்லறார்னு?:):)

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)

///


ராகவ்!!! கவனிச்சியா உங்க அண்ணாத்த என்ன சொல்லறார்னு?:):)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kailashi said...
//எல்லாம் அற, என்னை இழந்த நலம்
= இதுவே பரிபூர்ண சரணாகதி!//

அருமை, அருமை//

யாராச்சும் சரணாகதி="சும்மா" இருத்தல் பற்றிப் பேசுவார்கள்-ன்னு நினைச்சேன்! நீங்க லைட்டா ஆரம்பிச்சி இருக்கீங்க! பார்ப்போம், வேற யாராச்சும் வராங்களா-ன்னு! :)

//இன்று அன்னாபிஷேக தரிசனம் பெறுங்கள்//

கண்டேன் அவர் திரு அன்னம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
சும்மா இரு பதிவைப்படித்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை!//

:)
யக்கா! நீங்க இட்டதும் சூப்பர் பதிவு-க்கா! நன்றி! :)

//அலங்காரத்துக்கு இங்கெ நான் அடிக்கடிவரலேன்னாலும் அதுபிடிச்சவிஷயம் தான்//

பெண்கள் அலங்காரம் பிடிக்கலை-ன்னும் சொல்வாங்களோ?
என்ன கொஞ்சம் சீக்கிரம் பண்ணிக்கிட்டு கிளம்பணும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மௌனியாய்ச் சும்மா இருக்க அருளாய்
சுத்த நிர்க்குணமான பரதெய்வமே//

மெள(னி) ?
ஸ்பெல்லிங் மிஷ்டேக் எல்லாம் ஒன்னும் இல்லியே? :)))

//இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில்
பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்//

எனக்கு ஒன்னு புரியலை-க்கா! கேள்வியாக் கேக்குறேன்! அன்பர்கள் யாராச்சும் பதில் சொல்லுங்க!

1. அஹம் பிரம்மாஸ்மி-ன்னு அகத்தைத் தான் பார்க்கச் சொல்கிறோம்! அப்புறம் ஏன் அஹங்காரம் ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்? (அகங்காரம்=ஆணவத்தைச் சொல்லவில்லை! அஹங்காரத்தைச் சொன்னேன்)

2. அஹங்காரம் என்றால் என்ன? மமகாரம் என்றால் என்ன?

//'சொல் அற சும்மா இரு' எனும் முருகனின் உபதேசம் அந்த மாபெரும் பொருளை அறியமுடியவில்லை என்று அருணகிரி கூறுகிறார்//

அறிய முடியவில்லை-ன்னு சொல்றாரே தவிர, "சும்மா" இருக்க முடியலை-ன்னு சொல்லலை பாருங்க! அதான் முக்கியம்! அதான் பதிவில் முக்கியமாக் கோடிட்டுக் காட்டினேன்!

அறிய முடியவில்லை என்றாலும் அவரால் "சும்மா" இருக்க முடிந்தது!
அதுக்கும் காரணம், முருகனை முன்னுக்குத் தள்ளித் தன்னைப் பின்னுக்குத் தள்ளியதால் தான்! அது தான் பதிவின் மையச் சிந்தனை!

முருகனருள் "முன்" நிற்கும் என்று சொல்லும் போதெல்லாம், நாம் நம்மைப் பின்னே தள்ளி, முருகனை மெய்யாலுமே முன்னே தள்ள முயற்சிகள் செய்ய வேணும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எண்ணங்களை அற்றுப்போகச்செய்ய வேண்டுமானால் முதலில் கைவரியை அடக்கி மத்யமாவை அடக்கி பஸ்யந்தியையும் அடக்கி முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்//

யக்கா-அப்படின்னா என்னக்கா?
மத்யமா, பஸ்யந்தி எல்லாம் ஒன்னும் தெரியாது! பாசந்தி தெரியும்! ஜாலியாக் குடிப்பேன்! :))

//மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில் உணர்வுகள் இருக்கமாட்டா. பதிப்பிக்கப்படவும் மாட்டாது.இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை//

:)
இது யோகிக்களுக்கான "சும்மா" இருத்தல்!
நமக்கான "சும்மா" இருத்தலைப் பதிவில் சொல்லிப்பிட்டேன்-பா!

//நினைப்பும் இல்லை இரவும் இல்லை பகலும் இல்லை
அது ஒரு TWILIGHT ZONE!//

பூஜ்ய ஸ்ரீ ஷைலாஜானந்த மகரிஷிகள் திருவடிகளே சரணம்! :))

//அப்படியே டைரில எழுதிவச்சதை சும்மா இப்போ நேரம்கிடைச்சிதேன்னு இங்க ஆன்மீகசூப்பர்ஸ்டார் பதிவில் பின்ன்னூட்டமென இட்டுவிட்டேன்!//

:)
ஆன்மீக சூப்பர் ஸ்டார் என்னிக்குமே குமரன் தான்!
அடியேன் சூப்பர் ஸ்டார் அல்ல! ஸ்வாதி ஸ்டார்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
அண்ணே.. ஒரு தடவை படிச்சேன்.. ஆனாலும் என் மரமண்டைல ஏற மாட்டேங்குது..//

அப்படின்னா "சும்மா" இருக்கீங்க-ன்னு அர்த்தம் ராகவ்! :)

//நல்லா படிச்சுட்டு, புரிஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.. இது வருகைப் பதிவு மட்டுமே. :)//

ஹா ஹா ஹா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
எனக்கு ஞாபகம் உள்ள குறல் இதுதான்.. முதல்வன் படத்துல ரகுவரன் சொல்வாரே.. :)

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்தொழுகு வார்//

குறள் வளர்த்த ரகுவரா நீ வாழ்க! நின் புகழ் வாழ்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
தேவர்கள் எல்லாம் பாற்கடல்ல இருந்து வெள்ளி டம்ளர்ல பால் எடுத்து குடிப்பாங்கன்னு சொல்வேன்..//

மன்மதனும் ரதியும் மட்டும் ஒரே கடல்-ல ரெண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிப்பாங்களோ? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,
"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....
குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்! //

ரவி அண்ணா விளக்கங்கள் அருமை.. முதலில் நான் தான் குழப்பிக் கொண்டேன்..//

அப்படி வாங்க வழிக்கு!
அணுகும் போதே, "சும்மா" இருத்தல் பெரிய விஷயம்-ன்னு நினைச்சா இப்படி தான்! இப்ப பாருங்க! எம்புட்டு ஈசி!

இதான் அருணகிரியும் சொல்றாரு!
அம் மா பொருள் எல்லாம் தெரியலை-ன்னா கூட சும்மா இருந்தேன்! ஏன்னா முருகன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவனை முன் தள்ளி, என்னைப் பின் தள்ளிச், சும்மா இருந்தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
//
இந்தளப் பெண் பற்றி இன்னும் நிறைய எழுதணும்-னு நினைச்சேன்! அப்பறம் "சும்மா" இருந்துட்டேன்! :)
//
ராகவ்!!! கவனிச்சியா உங்க அண்ணாத்த என்ன சொல்லறார்னு?:):)//

ராகவ் நான் சொல்லுறத கவனிக்க மாட்டாரு!
அவர் இந்தளம் சொல்லுறத கவனிச்சிக்கிட்டு இருக்காரு! :))

Raghav said...

//பூஜ்ய ஸ்ரீ ஷைலாஜானந்த மகரிஷிகள் திருவடிகளே சரணம்! :)) //

நானும் வணங்கிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. பூஜ்ய ஸ்ரீ அப்புடின்னா என்ன அர்த்தம்.. ?? உலக விஷயங்கள்ல நாட்டம் இல்லாம இருக்குறதா..

Raghav said...

//மன்மதனும் ரதியும் மட்டும் ஒரே கடல்-ல ரெண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிப்பாங்களோ? :)//

நான் பாத்ததில்லைங்கண்ணோவ்.. பாற்கடல்னா.. பால் நிரம்பிய கடல்னு நினைச்சது சரியா தப்பா ?? :)

//ராகவ் நான் சொல்லுறத கவனிக்க மாட்டாரு!
அவர் இந்தளம் சொல்லுறத கவனிச்சிக்கிட்டு இருக்காரு!:))//

அண்ணே.. எனக்கு பந்தள ராஜனைத் தான் தெரியும்.. :)

குமரன் (Kumaran) said...

இறைவனின் திருமுக உல்லாசம். கண்டு கொண்டேன். எண்ணிக் கொண்டிருப்பேன். நன்றி இரவிசங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
நானும் வணங்கிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. பூஜ்ய ஸ்ரீ அப்புடின்னா என்ன அர்த்தம்.. ?? உலக விஷயங்கள்ல நாட்டம் இல்லாம இருக்குறதா..//

பூஜ்ய ஸ்ரீ-ன்னா பூஜிக்கத் தக்க, வணக்கத் திரு!
பூஜா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ-ன்னு படிச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
நான் பாத்ததில்லைங்கண்ணோவ்.. பாற்கடல்னா.. பால் நிரம்பிய கடல்னு நினைச்சது சரியா தப்பா ?? :)//

தப்பே இல்ல!
வெள்ளி டம்ளர் தான் தப்பு! ஸ்ட்ரா போட்டு தான் தேவர்கள் குடிப்பாங்க! :)

//அண்ணே.. எனக்கு பந்தள ராஜனைத் தான் தெரியும்.. :)//

பந்தள ராணி-ன்னு சொல்லுங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இறைவனின் திருமுக உல்லாசம். கண்டு கொண்டேன். எண்ணிக் கொண்டிருப்பேன். நன்றி இரவிசங்கர்//

என்ன குமரன்
கண்டு கொண்டேன்
எண்ணிக் கொண்டேன்-ன்னு கவி பாடறீங்க?
சும்மா=சரணாகதி விளக்கம் சொல்லுங்க! :)

emmem said...

Nandri KRS - murugan arul kittatum... thirumoolarin mozhiyil - arunagirinathar-kku kidaittha inbham peruga ivvaiyagham...

Prasad said...

இனிமையான நடை ... அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP