Tuesday, February 3, 2009

அலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/வைணவ ஆண்டிகள்!

அந்தக் காலத்தில் புத்தகம், நூலகம் இதெல்லாம் இல்லாமலேயே, மற்ற ஏடுகளைப் படி எடுத்து வச்சி, படிக்கும் பழக்கம் இருந்திருக்கு போல! பாருங்களேன், ஆண்டாள் வள்ளுவரையும் இளங்கோவையும் வாசித்து, அதே வரிகளை அப்படியே பாட்டில் கையாளுறா!

அருணகிரியும் அதே போல பல நூல்களை ஆர்வமா படிச்சி வச்சிருக்காரு போல! சைவ நூல்களை மட்டுமல்ல! வைணவ நூல்களையும்!
ஆழ்வார்களின் வரிகளை அப்படியே தம் பாட்டில் எடுத்துக் கையாளுகிறார்! ஆர்வம் தானே காரணம்!

நீரளவே அகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம்! அதுவும் இணைய உலகில், திரையில் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, நல்ல புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிப்போம்!

மாயோனின் மாயத்தில் மயங்காத மனம் உண்டா என்ன? கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள? :)
இன்னிக்கி கந்தர் அலங்காரத்தில், கந்தனுக்கு அலங்காரம் இல்லை!
என் ஆருயிர்க் கண்ணனுக்கு அலங்காரம்! செய்வது யாரு?


வேற யாரு? கேஆரெஸ் தான் ஆனா-வூனா கண்ணனை இழுத்துக்கிட்டு வருவான்!-ன்னு அவசரப் படாதீங்க மக்கா! கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல! திருமுருகச் செம்மல் அருணகிரிநாதர்!
ஓங்கி உலகளந்த உத்தமனை, ஓங்கி அலங்காரம் செய்கிறார் அருணகிரி! நாமும் பார்க்கலாமா? :)




(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!


மேலோட்டமான பொருள்: மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டான் ஒரு சின்னக் குழந்தை! அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின! பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன்! அவனுக்கோ சிறிய திருவடிகள்!
அந்தச் சிற்றடிகள், தேவர் தலையிலும், மயில் மேலும், என் பாடல்கள் மேலும் பதிந்துள்ளதே!

பிரிச்சி மேயலாமா?
அது என்னாங்க தாவடி? தாவடி ஓட்டும் மயில்=முருகன் ஓட்டும் மயில்! அப்போ தாவடி=முருகன்? முருகனுக்கு இன்னொரு பேரு தாவடியா? ஹா ஹா ஹா!

ஆனால் பெரியாழ்வாரும் தாவடி-ன்னு சொல்றாரே! அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி! அப்படீன்னா ஆழ்வார் பாசுரம் அத்தனையும் அருணகிரிக்கு அத்துப்படி-ன்னு தானே அர்த்தம்?

ஆழ்வார் சொல்லும் தாவடியைப் பாருங்கள்:
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று,
"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!
தரணி அளந்தானால் இன்று முற்றும்!

அருணகிரியாரின் நூல் வாசிப்பு எப்படிப் பரவிப் படர்ந்து இருக்கு-ன்னு பாருங்க!
ஆரம்ப கால வாழ்வில், சுகபோகத்தில் திளைத்தாலும், புத்தகம் படிக்கற நல்ல பழக்கத்தை மட்டும் அருணகிரி விடலை போலிருக்கு!

பின்னாளில் தொழுநோய் வந்த போதும் அது தான் கை கொடுத்தது! தியானத்தில் அமர்ந்த பின்னும் அது தான் கை கொடுத்தது!
"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்" என்று அவரே சொல்கிறார்! அந்தக் கல்வியின் பயனைத் "தாமே பெற வேலவர் தந்ததினால்"...திருப்புகழ் விளைந்தது! நாமும் நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க பழகிப்போம்!


"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!

இரண்டாம் அடியில் தான் தாவடி இட்டானாம்! இப்போ சொல்லுங்க! தாவடி-ன்னா என்ன?

முதல் அடியில் நம்முடைய பூமியை அளந்தான்! அது எளிது! ஏன்னா அவன் பூமி மேலேயே நிற்கிறான்!
இரண்டாம் அடிக்கு, ஆகாசம் பயணப்படணும்! அங்கே, தான் மட்டும் தனியாப் போய், அளந்துட்டு வர முடியுமா? சாட்சி கேட்பார்களே! என்ன செய்யலாம்?

ஆங்...கீழே இருந்தே, "தாவி" அளக்கலாம்! காலை உசரமாத் "தாவுவது" போல் தூக்கி, தாவி அளக்கலாம்! "தாவி" அடியால் அளக்கலாம்! "தாவடியால்" அளக்கலாம்!
* தாவடி புரிஞ்சுதுங்களா? தாவி வரும் அடி = தாவடி!
* முருகனுக்கு காவடி! பெருமாளுக்குத் தாவடி!
* அடியார்கள் குறை தீர்க்க, தாவி வரும் அடி = தாவடி!

பெருமாள் திருட்டுப் பய! அயோக்கியப் பய! குழந்தையா வந்து மூனு அடி மண்ணு கேட்டுப்புட்டு, இப்படி மொத்தமா வளைச்சிக்கிட்டானே? - இதுவா சாமியின் லட்சணம்? அப்படின்னு சில பேரு மனசுக்குள்ள நினைச்சிப்பாங்க! சிலர் வெளிப்படையாவே ஏசுவாங்க! :)
ஆனால் உண்மை என்ன? பெருமாள் ஏமாத்தினாரா? = இல்லை! அருணகிரியே சொல்றாரு!

மகாபலிக்கு பூமி முழுசும் சொந்தமா என்ன? இல்லையே! பூமியில் ஒரு பெரும் பகுதிக்கு அவன் அரசன்! அவ்ளோ தான்! அவனைத் தவிர இன்னும் பல அரசர்கள் பூமியில் இருந்தார்கள்!
பூமியே முழுசும் சொந்தம் இல்லாத போது, விண்வெளி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்கள் எல்லாமுமா மாவலிக்குச் சொந்தம்? இல்லை அல்லவா!

அப்படியிருக்க, மாபலிக்கு உரிமை இல்லாத ஒன்றில் எப்படி அவனை ஏமாற்ற முடியும்?
மாவலிக்கு உரிமை இல்லாத நிலங்களையும் பெருமாள் சேர்த்தே தான் அளந்தார்! ஏன்?

நிலத்துக்கு உரிமையாளர், தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டாலும், அப்பப்போ சென்று, அளந்து, வேலி காத்து வருவார்! அதே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான்! தன் திருவடி சம்பந்தம் நமக்குச் செய்வித்து, நம்மை உரிமை கொண்டாட வந்தான்!



1. மொத்த உலகங்களுக்கும் தன் திருவடி சம்பந்தம் செய்து வைக்கணும்!
2. மக்கள் பாவம் தீர்க்கும் கங்கை என்னும் ஆற்றை, உலகுக்குத் தரணும்!
3. பிரகாலாதனின் பேரனான மாவலியைக் கொல்லாது, அவன் ஆணவத்தை அடக்கி, அவன் பிள்ளை நமுசி பெண்களுக்குச் செய்த அட்டகாசங்களையும் அடக்கணும்!

ஒரே கல்லில் மூனு மாங்கா அடிப்பது எப்படி? :)
இறைவனே குழம்பி நிற்கும் போது, அவன் உதவிக்கு வந்தன அவன் திருவடிகள்!

1. முதலில், அந்தச் "சிறிய திருவடி", "பெரிய திருவடி" ஆகி, நம் மொத்த பேருக்கும் திருவடி சம்பந்தம் செய்து வைத்தது!

2. பின்பு, "பெரிய திருவடி", "தாவடியாகி", மேலே எழுந்தது! நான்முகன் "தாவடியை" நீராட்டினார்!
விண்வெளியின் ஆவரண நீர், மேலே பிரம்மன் விடும் நீர், கீழே மாவலி தாரை வார்க்கும் நீர் என்று மூன்றும் ஒரே தாரையாகப் பாய, பெருமாள் திருவடிகளில் கங்கை உற்பத்தி ஆனது!

3. மாவலியைக் கொல்லாது, அவன் மும்மலத்தின் முதல் மலமான, ஆணவத்தை அழித்தது!
அவதாரம்-ன்னாலே அழித்தல் என்பது போய், "அழிவு இல்லாத அவதாரம்" என்று செய்து வைத்தது! மாவலிக்கு முன்பு இருந்ததை விட பெரிய அரசை, மொத்த பாதள அரசையும் கொடுத்தது!

இறைவனையே கொலைத் தொழிலில் இருந்து தடுத்து, அருள் தொழிலில் ஈடுபடச் செய்தது திருவடிகள்!
தாவில் கொள்கை-ன்னு நக்கீரர் பாடுவார்! தாவு=குற்றம்!
* தாவு இல்லாத அடி = தாவடி!
* நம்மிடம் தாவி வரும் அடி = தாவடி!
* உன்னடியை எனக்குத் "தா-அடி" என்று நாம் கேட்கும் = தாவடி!

* நம் நெற்றியில், நாம் தான், திருவடிகள் (நாமம்) தாங்கியிருக்கோம்னா,
* தன் நெற்றியில், இறைவனே, திருவடிகள் (நாமம்) தாங்கிக்கிட்டு இருக்கான்!
இது தான் திருவடிப் பெருமை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார் இறைவன் "அடி" சேரா தார்!


படி மாவலி பால் = மாவலியிடம்,
மூவடி கேட்டு = மூன்று அடி கேட்டு,
அன்று மூது = அன்று, முதியதாய், (பல காலம் இருந்த விண்வெளி)
அண்ட கூட முகடு முட்ட = அண்ட சராசரங்களின் முகடு (உச்சி) முட்டும் படியாக,
சேவடி நீட்டும் பெருமான் = சேவடியை நீட்டினான் "பெரு"மான்! "ஓங்கி" உலகளந்த உத்தமன்!
மருகன் = அவனின் ஆசை மருமகன் முருகன்!

தன் சிற்றடியே = முருகக் குழந்தையின் சிற்றடிகள்! வாமனக் குழந்தைக்கோ பெரிய திருவடி! முருகக் குழந்தைக்கோ சிறிய திருவடி! இருவருமே ஆண்டிக் கோலம் தான்! :)

இரு ஆண்டிகள்! பெரிய திருவடிகள், சிறிய திருவடிகள்


தாவடி = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்

ஓட்டும் மயிலிலும் = அவன் ஓட்டும் மயில் மேல் பாதம் பட
தேவர் தலையிலும் = தேவர்கள் தலையில் பாதம் பட
என் பா அடி ஏட்டிலும் = என் பாக்களான திருப்புகழ் ஏட்டிலும் பாதம் பட
பட்டது அன்றோ = அவன் திருவடி சம்பந்தம் பட்டவன் ஆனேனே!

இங்கே அருணகிரியார் தன்னைத் தானே மாவலிக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் என்றும் சிலர் சொல்லுவர்! //மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாட்சியாகத் தத்தம் ஆணவம் கீழ் அடக்கப்பட்டு, இறைவன் திருவடி முத்திரைப் பெற்று ஏற்று கொள்ளப்பட்டனர்// - என்பது சைவ சித்தாந்த நூல்களில் இருந்து வாரியார் சுவாமிகள் காட்டுவது!

மாவலி போல் செல்வம் நிரம்பிய அருணகிரி, உடல் தனதே என்ற ஆணவத்தில் அழுந்திப் பாவங்களே புரிய, உடல் சுகம் என்னும் ஆணவம் அடக்கி, தன் அடிக்கீழ் அழுத்திக் கொண்டான் முருகன்! மாவலித் தலைமேல் மாமன் வைத்தாற் போல், அடியேன் தலைமேல் மருகன்-முருகன் வைத்தானே என்று கொண்டாடுகிறார் திருமுருகச் செம்மல், அருணகிரிநாதர்!



(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
தடுங்கோள் மனத்தை! விடுங்கோள் வெகுளியை! தானம் என்றும்
இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்! எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

மேலோட்டமான பொருள்:
மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்! தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்! இப்படி இருந்தால்...
ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!

கொஞ்சம் விரிவான பொருள்:
தடுங்கோள் மனத்தை = மனசைத் தடுக்கணும்! யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல? (ஈழத்து நிலைப்பாட்டுக்கு அண்மையில் தன் இன்னுயிர் தந்த முத்துக்குமார் தான் நினைவுக்கு வரார்)! அதே போல், தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!

விடுங்கோள் வெகுளியை = வீண் கோபத்தை விடணும்! உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!

தானம் என்றும் இடுங்கோள் = கெடுவாய் மனனே கதி கேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்! -ன்னு அனுபூதியிலும் தானம் இடச் சொல்லுவாரு!
ஐயமும் பிச்சையும் ஆந் தனையும் கைகாட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!

இருந்தபடி இருங்கோள் = முன்னேறாம அப்படியே இருந்தபடியே இருங்கோ-ன்னா சொல்றாரு அருணகிரி? இல்லை இல்லை!
* முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே!
* முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு! முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!

இப்படி இருந்தாக்கா...
எழு பாரும் உய்ய = ஏழ் உலகும் உய்ய
கொடும் கோபச் சூருடன் = கோபச் சூரனையும்
குன்றம் திறக்க = அவன் தம்பி தாரகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! அவனையும் தொளைக்க = அவர்களைத் துளைக்க
வை வேல் விடுங்கோன் = கூர் வேலை விட்டவன், முருகன்!

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் = அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்!
இருந்தபடி இருங்கோள்! அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!
மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!

24 comments:

Kavinaya said...

ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடித்ததும், பொருத்தமான படங்களும், விளக்கங்களும், அருமை. வை வேல் விடுங்கோன் வையகத்தைக் காக்கட்டும்.

குமரன் (Kumaran) said...

இரவி,

அந்தக் காலத்தில் நிறைய படி எடுத்து வைத்துப் படிக்கும் வழக்கம் இருந்தாலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு படி (பிரதி) என்ற அளவிற்குத் தான் இயன்றிருக்கும். பெரும்பாலும் கற்பவர்கள் ஆசிரியர் சொல்லச் சொல்லத் திருப்பிச் சொல்லி கற்றிருப்பார்கள். திண்ணைப்பள்ளிக்கூடங்கள் குருகுலங்கள் போன்ற அமைப்புகளில். பாடல்களை இயற்றிய அனைவருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். அதனால் கவிதாயினி ஆண்டாளும் கவிஞர் அருணகிரியும் பாடல்கள் இயற்றிய வேறு எவரும் அவருக்கு முந்தைய நூற்கள் பலவற்றையும் கற்றிருப்பார்கள் (படித்திருப்பார்கள் என்று சொல்லவில்லை - இரண்டிற்கும் நுண்ணிய வேறுபாடு) என்றே நினைக்கிறேன்.

அப்படி முந்தைய நூற்களைப் படிக்கும் போது பள்ளியின் தன்மையைப் பொறுத்து கற்ற பாடங்கள் அமைந்திருக்கும். சமயப் பொதுவான பள்ளி என்றால் எல்லா சமய நூற்களும் கற்பார்கள். சமய சார்பான பள்ளி என்றால் முதலில் அச்சமய நூற்களை முதலில் படித்துவிட்டு பின்னர் வேறு சமய, சமயம் சாராத நூற்களைக் கற்பார்கள். சமயம் சார்ந்த இடங்களிலும் வேறு சமய நூற்பிரதிகள் இருந்தன என்ற தரவுகளே அதற்குச் சாட்சி. உ.வே.சா. சைவ ஆதினங்களில் சமண இலக்கியப் பிரதிகளைக் கண்டிருக்கிறார். (அனல் வாதம், புனல் வாதத்தால் சமண இலக்கியங்களை அழித்தார்கள் சைவர்கள் என்று எந்த வித ஏரணமும் இன்றிப் புறம் பேசித் திரிபவர்கள் இந்தத் தரவுகளையும் செய்திகளையும் புறக்கணித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்)

ஆண்டாள் குறள், சிலம்பு போன்ற இலக்கியங்களில் இருந்து எடுத்தாளுவதையும் தன் பாடல்களைச் சங்கத் தமிழ் என்று குறிப்பதையும் பார்த்தால் அவளுக்கு வைணவ இலக்கியங்கள் மட்டுமில்லாது சமய சார்பற்ற (திருக்குறளும் சிலம்பும் சமண சமயத்தாரால் இயற்றப்பட்டவை என்று நினைத்தால் சமண சமய) நூற்களைக் கற்றுள்ளாள் என்பது தெரிகிறது.

அருணகிரிநாதர் கற்ற இடம் சமயப் பொறையை விரும்பும் இடம் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் மாமனைப் பாடிவிட்டு மருகனைப் பாடுவது, அன்னை தந்தையரைப் பாடிவிட்டுப் பிள்ளையைப் பாடுவது என்று ஒரு வழக்கமாகவே திருப்புகழில் வைத்திருக்கிறார் (என்று தோன்றுகிறது).

குமரன் (Kumaran) said...

தாவடி என்று தொடங்கும் இந்தப் பாடலைப் படிக்கும் போது 'அடியேன் முடை நாய்த் தலையே' என்று முடியும் அபிராமி அந்தாதிப் பாடலும் 'என் நெஞ்சகத்தும்' என்று சொல்லும் ஆழ்வார் பாசுரமும் நினைவிற்கு வருகிறது. அவை காலத்தால் முந்தியவை என்றால் அருணகிரியார் அவற்றையும் படித்திருக்க வாய்ப்புண்டு. அந்தப் பாடல்களில் வழியே 'மயிலின் மேல், தேவர் தலையில், என் பாடல்கள் மேல்' என்று சொல்கிறார் போல் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

மாவலி மூன்று உலகங்களையும் வென்று ஆண்டு கொண்டிருந்தான் என்று தானே படித்த நினைவு. நீங்கள் உலகத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவன் ஆண்டான் என்று சொல்கிறீர்களே?

'ஏழாட்காலும்' என்று சொல்வது போல் ஒரு தலைமுறையின் குணம் ஏழு தலைமுறைகளுக்கு வரும் என்று சொல்வார்களே. பொன்னாதனின் மகன் பெருகல் ஆதன் பொன்னனின் குணத்திலிருந்து மாறினான். பெருகலாதனின் குணம் மாவலியன் வரை தான் வந்ததா? நமுசிக்கு வரவில்லையா? நான்காம் தலைமுறை தானே.

குமரன் (Kumaran) said...

//தாவடி = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்//

இது தவறு என்று தோன்றுகிறது. தாவடி மயிலுக்குத் தான் முருகனுக்கு இல்லை. ஏனெனில் 'சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே' என்று கடைசி அடியில் சொல்லிவிட்டாரே. அதனை இங்கே கொண்டு வந்து பூட்டினால் தாவடி என்பது மயிலைத் தான் சொல்கிறது என்பது தெளிவு. இல்லையேல் தேவையில்லாமல் இரு முறை முருகன் திருவடிகளைச் சொன்னது போல் அமைந்து 'சொன்னதைச் சொல்வது' என்ற குறை தோன்றும்.

குமரன் (Kumaran) said...

மாவலி இறைவன் திருவடி முத்திரை பெற்றான் - சரி; தெரியும். அருணகிரிநாதரும் முருகன் திருவடி முத்திரை பெற்றாரா? கோபுரத்து இளையனார் அருணகிரியார் கோபுரத்தில் இருந்து தாவிய போது தன் திருக்கைகளில் தானே அவரைத் தாங்கினார்; தாவடியா தந்தார்?

இந்தப் பாட்டிலும் 'மயிலின் மேல், தேவர் தலை மேல், என் பாவடி ஏட்டில்' என்று தான் சொல்கிறார்; தன் தலை மேல் என்று சொல்லவில்லை.

குமரன் (Kumaran) said...

அருணகிரிநாதர் வணிகர் குலத்தவர் தானே. பார்ப்பனர் வீட்டிற்குப் பக்கத்தில் வாழ்ந்திருப்பாரோ? ஒரேயடியா 'தடுங்கோள், விடுங்கோள், இடுங்கோள்' என்று பாடிக் கொண்டே போகிறாரே? :-)

குமரன் (Kumaran) said...

//அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் = அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்!//

எக்ஸ்ட்ரா பொருள் சொல்றீங்க. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மொதல்ல ரெண்டு ஆண்டிப் பசங்களும் எப்படி இருக்காங்க-ன்னு சொல்லுங்க குமரன்! அப்புறம் தான் உங்கள் அருமையான கேள்விகளுக்கு எல்லாம் பதில் வரும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எக்ஸ்ட்ரா பொருள் சொல்றீங்க. :-)//

ஹிஹி!
அருள் "தானே" வந்து வெளிப்படும் - அப்படின்னா என்ன?
தன்னால் ஆவதொன்றில்லாக் காரிய மாயை!
அதில் உழலவும் வேண்டா! அருள் "தானே" வெளிப்படும் தானே! :)

இது மற்றுள்ள அனுபூதியோடும் பொருந்தித் தான் வருகிறது குமரன்!
Its not just my own personal viewpoint!

கெடுவாய் மனனே கதி கேள்...
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே-ன்னு அனுபூதி!

கர்மா, கர்ம யோகம் பத்தி தனியாப் பதிவு போட்டுடறேன் சீக்கிரமே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அருணகிரிநாதர் வணிகர் குலத்தவர் தானே//

இல்லை! அருணையார் அம்மா ஒரு தேவதாசியார்! பேர் முத்து!
அவருக்கு ஒரு அக்கா! பேரு ஆதி!

//பார்ப்பனர் வீட்டிற்குப் பக்கத்தில் வாழ்ந்திருப்பாரோ? ஒரேயடியா 'தடுங்கோள், விடுங்கோள், இடுங்கோள்' என்று பாடிக் கொண்டே போகிறாரே? :-)//

ஐயோ சாமி! ஆளை விடுங்க! நான் வரலை இந்த விளையாட்டுக்கு!
//பார்ப்பனர் வீட்டிற்குப் பக்கத்தில் வாழ்ந்திருப்பாரோ?//-ன்னு மத்தவங்க கேட்டா ஒன்னுமில்லை! ஆனா நான் விளையாட்டாக் கூட கேட்டுறக் கூடாது! சீசரின் மனைவி நானு! எனக்குத் தனிச் சட்டம் :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அருணகிரிநாதரும் முருகன் திருவடி முத்திரை பெற்றாரா?//

திரு-நாவில் முத்திரை பெற்றார்!

திருவடி முத்திரை பற்றிய செய்தி திருப்புகழில் இருக்கலாம்!
SK இல்லீன்னா ஜிரா வந்து சொல்லட்டும்!

அப்பர் சுவாமிகளும் திருவடி முத்திரை பெற்றார்!

//இந்தப் பாட்டிலும் 'மயிலின் மேல், தேவர் தலை மேல், என் பாவடி ஏட்டில்' என்று தான் சொல்கிறார்//

ஆமாம்! அடியேனும் அதை தான் சொல்லியுள்ளேன்!
திருவடி முத்திரை = ஆனால் வாரியார் சுவாமிகள்/சைவப் பெரியார்கள் எடுத்தாண்ட வரிகள் அது! ஆக அது பிழையா இருக்க சான்ஸ் இல்ல!

ஆசார்ய விளக்கத்தில் இப்படிக் கேள்வி கேக்கறீங்களே குமரன்? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அதனால் கவிதாயினி ஆண்டாளும் கவிஞர் அருணகிரியும் பாடல்கள் இயற்றிய வேறு எவரும் அவருக்கு முந்தைய நூற்கள் பலவற்றையும் கற்றிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்//

நானும் அப்படியே தான் நினைக்கிறேன் குமரன்!

//சமயம் சார்ந்த இடங்களிலும் வேறு சமய நூற்பிரதிகள் இருந்தன என்ற தரவுகளே அதற்குச் சாட்சி.//

உண்மை!
வேறு சமய நூல்கள் கண்டிப்பா வச்சிருப்பாங்க!
சமய விவாதங்களின் போது எப்பமே அடுத்தவங்க புத்தகம் தான் ரொம்ப யூஸ் ஆகுமாம்! :)

//(அனல் வாதம், புனல் வாதத்தால் சமண இலக்கியங்களை அழித்தார்கள் சைவர்கள் என்று எந்த வித ஏரணமும் இன்றிப் புறம் பேசித் திரிபவர்கள் இந்தத் தரவுகளையும் செய்திகளையும் புறக்கணித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்//

ஹா ஹா ஹா!
அனல் வாதம், புனல் வாதத்தில் ஒரு ஏடு, ஒரு பிரதி வேணும்னா சோதனைக்கு வச்சிருப்பாங்க! அதுக்காக படி எடுத்து வச்ச மற்ற பதிப்புகள் எல்லாம் இல்லை-ன்னு ஆயிருமா என்ன?

சைவர்கள் ஏதோ சமண இலக்கியங்களை எல்லாம் தேடித் தேடி அனல் வாதம் புனல் வாதம் பண்ணாங்க-ன்னு சொல்றது எல்லாம் டூ மச்!

பகுத்தறியாம பகுத்தறிவு பேசறவங்க சொல்றது இது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவளுக்கு வைணவ இலக்கியங்கள் மட்டுமில்லாது சமய சார்பற்ற (திருக்குறளும் சிலம்பும் சமண சமயத்தாரால் இயற்றப்பட்டவை என்று நினைத்தால் சமண சமய) நூற்களைக் கற்றுள்ளாள் என்பது தெரிகிறது//

உண்மை!
நாச்சியார் திருமொழி vs கலித்தொகை/பரிபாடல் ஆய்வு ஒன்னை எப்பவோ படிச்சேன்! தாகத்துக்கு சங்கத் தமிழை ஊற்றி ஊற்றிக் குடிச்சிருப்பா போல கோதை! :)

//அருணகிரிநாதர் கற்ற இடம் சமயப் பொறையை விரும்பும் இடம் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் மாமனைப் பாடிவிட்டு மருகனைப் பாடுவது, அன்னை தந்தையரைப் பாடிவிட்டுப் பிள்ளையைப் பாடுவது என்று ஒரு வழக்கமாகவே திருப்புகழில் வைத்திருக்கிறார் (என்று தோன்றுகிறது).//

ஆமாம்!
மேலும் அருணகிரியின் வாழ்வில், அவர் அக்கா ஒரு பெரும் உந்து சக்தி & Influence! வரலாற்றைக் கொஞ்சம் அலசினாத் தெரியும்!
அருணையார் "பெருமாளே"-ன்னு ஒவ்வொரு திருப்புகழையும் முடிப்பதில் இதற்கும் கொஞ்சம் பங்குண்டு-ன்னு மட்டும் இப்பத்திக்குச் சொல்லிக்கறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தாவடி என்று தொடங்கும் இந்தப் பாடலைப் படிக்கும் போது 'அடியேன் முடை நாய்த் தலையே' என்று முடியும் அபிராமி அந்தாதிப் பாடலும்//

ஆமாம் குமரன்! நீங்க சொன்னாப் பிறகு தான் எனக்கு பட்டரும், ஆழ்வாரும் நினைவுக்கு வருகிறார்கள்!

இப்போ, மலரடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் - என்ற வள்ளலார் பாடலும் நினைவுக்கு வருகுது குமரன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மாவலி மூன்று உலகங்களையும் வென்று ஆண்டு கொண்டிருந்தான் என்று தானே படித்த நினைவு. நீங்கள் உலகத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவன் ஆண்டான் என்று சொல்கிறீர்களே?//

இரணியன் வேணுமானால் மூன்று உலகங்களையும் வென்று ஆண்டு கொண்டிருந்தான்!
மாவலி காலத்தில் தேவலோகத்தை யார் ஆண்டார்கள்? தேவேந்திரன் அப்போது ஒளிந்திருந்ததாக தகவல் இல்லையே!

இரணிய வதைப் படலத்துக்குப் பின், தேவேந்திரனுக்கு தேவலோகம் கிட்டவில்லையா என்ன? அல்லது கிட்டி, மாவலி மறுபடியும் பறித்துக் கொண்டானா?

சரி...மூவுலகும் மாவலி ஆண்டான் என்று இப்போதைக்கு வைத்துக் கொண்டாலும்,
பிரம்மாவின் சத்ய லோகம் முதலான லோகங்களை அவன் ஆள வில்லையே! ஆனால் சத்ய லோகமும் சேர்த்து தானே, அவன் கொடுத்த மூவடியாக, பெருமாள் அளந்தார்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'ஏழாட்காலும்' என்று சொல்வது போல் ஒரு தலைமுறையின் குணம் ஏழு தலைமுறைகளுக்கு வரும் என்று சொல்வார்களே//

கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறு இருந்தால் அடியேனை மன்னிக்கவும், குமரன்!

பொதுவாக இந்தக் குல வழியாக வருவது, பரம்பரை பரம்பரை - ஏழு தலைமுறையாக வருவதில் எல்லாம் அடியேனுக்கு நம்பிக்கை இல்லை குமரன்! குணங்கள் அப்படி வரும்-ன்னும் தோனலை!
But Genetics can throw more light scientifically than me!

அந்த ஆசார்யர் வம்சத்தில் நாங்கள் வந்திருக்கோம் என்று பலர் என்னிடம் நியூயார்க் ஆலயத்தில் கூடச் சொல்லி உள்ளார்கள்! திரும்பத் திரும்ப ஒரு விதப் பெருமையில் சொல்லுவார்கள்!

ஒரு சிரிப்புடன் நகர்ந்து விடுவேன்! ஏனென்றால் That statement has no meaning! Poor Prahaladhan didnt have such an opportunity to say so! :)

//பொன்னாதனின் மகன் பெருகல் ஆதன் பொன்னனின் குணத்திலிருந்து மாறினான்//
//நமுசிக்கு வரவில்லையா? நான்காம் தலைமுறை தானே//

பெருகல் ஆதன் அப்போ அந்த ஏழாவது ஆளா?
அப்படி வச்சிக்கிட்டா கூட...This whole thing is so relative!

Number 1's gunam comes till Number 7.
Number 2's gunam can come till number 8
Number 3's gunam can come till number 9
இதுக்கு அப்போ என்ன தான் முடிவு? விடிவு?

எனவே இதை கொள்கை அளவிலும் கூட அடியேன் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! "எழாட்காலும்" என்ற ஆழ்வாரின் வரிகள் வெறுமனே பரம்பரை பாத்யதையைக் குறிப்பது அல்ல! "ஏழேழ் பிறவிக்கும்" என்பது போல் இதற்கும் விளக்கம் வேறு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இது தவறு என்று தோன்றுகிறது. தாவடி மயிலுக்குத் தான் முருகனுக்கு இல்லை//

உம்ம்ம்
தாவடி "ஓட்டும்" மயிலிலும்-ன்னு பாடறாரு!

மயிலுக்குச் சொல்லியிருந்தா தாவடி "ஓடும்" மயில்-ன்னு சொல்லலாமே! "ஓட்டும்" மயில்-ன்னு சொல்கிறாரே!

நான் எப்படிக் கொண்டேன்-ன்னா
தாவடி,
1. ஓட்டும் மயிலிலும்,
2. தேவர் தலையிலும்,
3. என் பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ!

படி மாவலி பால், மூவடி கேட்டு,
அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்!
அவன் சிற்றடியே! அவன் சிற்றடியே!

I got the touch of thiruvadi!
....
....
Hey! I got it! I got it!-ன்னு வழக்கம் போல நான் தான் லூசுத்தனமா, லோக்கலா பொருள் எடுத்துக்கிட்டேனோ? :))

kaumaram.com-இல் கந்தர் அலங்காரம் தான் இருக்கு! பொருளுரை இல்லை! யாராச்சும் பாத்துச் சொல்லுங்களேன்!

VSK said...

தாவடி (p. 512) [ tāvaṭi ] , s. journeying, பிரயாணம்; 2. battle, fight, போர்.

தாவடித் தோணிகள், boats going near the shore to cut out the vessels of the enemy.
தாவடிபோக, to go on an excursion.

இதில் வரும் பொருளைப் பார்த்தால், நீங்கள் சொல்லியிருக்கும் பொருள் அருணைக்கும் பொருந்தாது. ஆழ்வார்க்கும் பொருந்தாது.

அருணையைப் பார்ப்போம்!

தாவடி ஓட்டும் மயிலிலும் =
முருகன் சூரனோடு போருக்குப் போகிறான்! மயில் மீது ஏறி!
முருகன் போர் செய்தாலும், இங்கும் அங்குமாகப் பாய்ந்து அவன் நிகழ்த்தும் போரை ஓட்டுவதே இந்த மயில்தான்!

மயில் அலையும் இடத்திலெல்லாம் சென்று முருகன் செய்யும் போர் இது!


அடுத்து, ஆழ்வார்:

இதற்கு கிட்டத்தட்ட ரவியே சரியாக வந்துவிட்டு, பின் ஏனோ, நகர்ந்துவிட்டார்!

//இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!//

இதற்கு ரவி சொல்லியிருப்பது:::
//ஏன்னா அவன் பூமி மேலேயே நிற்கிறான்!
இரண்டாம் அடிக்கு, ஆகாசம் ””பயணப்படணும்””!//

இப்ப மேல போய்ப் பாருங்க!

”தாவடி”ன்னா பிரயாணம் எனவும் ஒரு பொருள் இருக்கு!

அதான் இங்கே சொல்லியிருக்கார்!
பூமியிலிருந்து ஆகாசத்துக்குப் பிரயாணம்!

நல்ல பாடல் ரவி!!

குமரன் (Kumaran) said...

//திருவடி முத்திரை = ஆனால் வாரியார் சுவாமிகள்/சைவப் பெரியார்கள் எடுத்தாண்ட வரிகள் அது! ஆக அது பிழையா இருக்க சான்ஸ் இல்ல!//

இருக்கலாம். எனக்கு இன்னும் புரியவில்லை. நாவில் இட்ட முத்திரை என்றால் புரிகிறது. ஆனால் திருவடி முத்திரை என்றால் புரியவில்லை/தெரியவில்லை. பிழையாக இல்லாமல் இருக்கலாம்; தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்.

//ஆசார்ய விளக்கத்தில் இப்படிக் கேள்வி கேக்கறீங்களே குமரன்? :)) //

நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே இரவி அதனைச் சொல்லும் வாய்ப்பு எனக்கு இன்று. உடையவர் அவருக்கு முன்னால் இருந்த சங்கராசாரியாரின் விளக்கத்தில் தானே கேள்வி கேட்டார். அவருக்கு வேறு விளக்கம் தெரிந்திருந்தது. ஏனெனில் அவர் இராமானுஜர். அடியேனுக்கு வேறு விளக்கம் தெரியாது. நான் இளையாழ்வார் இல்லை; தெரிந்து கொள்ளக் கேட்கிறேன். அவ்வளவு தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க SK ஐயா!
தாவடி-ன்னா பயணம்-ன்னு வேற ஒரு பொருள் இருக்கா? நன்றி சொன்னதுக்கு!

தாவடி "ஓட்டும்" மயில் என்பதற்கு அடி-ன்னு எடுத்துக்காம, பயணம்-ன்னு எடுத்துக்கிட்டா, நீங்க சொன்ன விளக்கமும் பொருந்தியே வருகிறது!
பயணத்தை ஓட்டும் மயில்!

//முருகன் சூரனோடு போருக்குப் போகிறான்! மயில் மீது ஏறி!//

சூரனோடு போர் புரிந்த பின்னர் தானே, சூரன் மயி்ல் வாகனமாய் ஆகிறான்!
அப்புறம் எப்படிப் சூரனோடு போருக்கு, "மயில் மீது ஏறிப் போகிறான்" முருகன்? கொஞ்சம் விளக்க வேணுமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆசார்ய விளக்கத்தில் இப்படிக் கேள்வி கேக்கறீங்களே குமரன்? :)) //

//நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே இரவி அதனைச் சொல்லும் வாய்ப்பு எனக்கு இன்று//

ஹிஹி! நன்றி! நன்றி!
எனக்கு ஒன்னும் பிரச்சனையே இல்லை! ஆனால் ஆச்சார்ய விளக்கத்துக்கு மாறுபட்டால் சிலர் கோச்சிக்கலாம்! அதான் சொன்னேன்! :)

SK,
அருணகிரியாருக்கு முருகன் திருவடி தீட்சை கொடுத்த நிகழ்ச்சி இருக்கா? அறியத் தாருங்களேன்!

ENNAR said...

எனது ஊர் துவாகுடி திருச்சியில் உள்ளது இந்த ஊரை தாவடி என்றும் அழைப்பர், இதேபெயர் இலங்கையிலும்
ஓர் ஊருக்கு உண்டு. தாவடி என்றால் போர் செய்யக்கூடிய படைகளை நிருத்திவைக்க கூடிய இடம் என்று நான் கேள்விப்பட்டதுண்டு

Vimala said...

Am very much eager to read all poet

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP